‘ஆர்.எஸ்.எஸ் ஓர் திறந்த புத்தகம்’ விவரிக்கும் அதிகம் அறியப்படாத பரிமாணங்கள்

கடந்த 95 ஆண்டுகளில் ஆர்.எஸ்.எஸ்ஸின் அழைப்பை ஏற்று சங்க நிகழ்ச்சிக்கு வந்துள்ள பலதுறை பெரியோர்களின் பெயர்களைப் பட்டியலிட்டால் அது புகழ்பெற்றவர்கள் யார் எவர் நூல் ஆகிவிடும். அண்மையில் விஜயபாரதம் பிரசுரம் வெளியிட்டுள்ள ‘ஆர்.எஸ்.எஸ் ஓர் திறந்த புத்தகம்’ நூல், சங்கத்தின் கருத்தில் இணைந்த பெரியோர்களைப் பற்றி சங்கத்தில் செயல்படும் பல மதத்தினர் பற்றியும் தகவல் தருவது கவனம் கவர்கிறது. சில சாம்பிள்கள்:

அசீம் பிரேம்ஜி (தொழிலதிபர்)

மோகன்ஜியை சந்தித்தபிறகு, இந்தியா முழுவதும் உங்களைப் போன்றவர்கள் எத்தனை பேர் நமது நாட்டின் உண்மையான முன்னேற்றத்திற்கு தங்கள் வாழ்வை அர்ப்பணித்திருக்கிறீர்கள் என்பதை உணர்ந்தேன்.

உண்மையில், இந்தியாவின் துடிப்பான சிவில் சமூகத்தின் ஒரு பகுதியாகவே நீங்கள் இருக்கிறீர்கள்.

கைலாஷ்  சத்யார்த்தி (நோபல்)

எனது இறுதி நோக்கம், இந்தியாவை குழந்தைகளுக்கு பாதுகாப்பானதாக ஆக்குவதே ஆகும். சங்கம் இதை நிறைவேற்றும் திறன் கொண்டது’’.

நீதியரசர் கே.டி. தாமஸ்

மஹாத்மா காந்தி கொலைக்கு ஆர்.எஸ்.எஸ் தான் காரணம் என்று வெறுப்பு பிரச்சாரம் முன்வைக்கப்படுகிறது. இதில் சற்றும் நியாயம் இல்லை. மகாத்மா காந்தி கொலை வழக்கின் தீர்ப்பை நான் முழுவதும் படித்தேன். நீதிபதி திரு கோஸ்லா, காந்திஜியின் கொலைக்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு சற்றும் தொடர்பில்லை என்று குறிப்பிட்டுள்ளார். எனவே இந்த வெறுப்பு பிரச்சாரம் நிறுத்தப்பட வேண்டும்.

ஆர்.எஸ்.எஸ் சிறுபான்மையினருக்கு எதிரானது என்பது ஆதார பூர்வமற்ற குற்றசாட்டு. நீங்கள் எந்த மதத்தவராக இருந்தாலும், நம் தேசத்தின்மீது பற்றோடு இருங்கள், மற்ற நாடுகளுக்கு துணை போகாதீர்கள் என்று மட்டும் ஆர்.எஸ்.எஸ் கூறி வருகிறது. என் மதம் தான் பெரியது, எனவே உன் மதத்தை விட்டு, என் மதத்திற்கு வா என்று கூறுவது தவறே.

டாக்டர் எஸ்.எஸ். பத்ரிநாத்

சங்கர நேத்ராலயாவின் நிறுவனர் டாக்டர் எஸ்.எஸ்.பத்ரிநாத், தன் நிறுவன ஊழியர்க ளிடையே, தேசபக்தியை கொண்டு சேர்க்கும் தொடர் முயற்சியின் ஒரு பகுதியாக, குழு உணர்வு, ஊழியர் களிடையே சேவை மனப்பான்மை ஆகியவற்றை வளர்ப்பதற்கு, அத்தகைய பண்புகளை அன்றாட வாழ்வில் மேற்கொண்டிருக்கும் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் அகிலபாரத தலைவரான டாக்டர், மோகன் பாகவத்தின் சொற்பொழிவுக்கு ஏற்பாடு செய்திருந்தார்.

குல்ரேஜ் ஷேக், பல் மருத்துவர்

எட்டு ஆண்டுகளுக்கு முன் ஆர்.எஸ்.எஸ்ஸில் சேர்ந்த ஷேக் ஒரு மருத்துவ குடும்பத்தைச் சேர்ந்தவர். தந்தையும் இரண்டு சகோதரர்களும் பொது அறுவை சிகிச்சை நிபுணர்கள். மனைவி பொதுமருத்துவர். சகோதரி மகப்பேறு மருத்துவர். மலைவாழ் மக்களுக்கான ஆர்.எஸ்.எஸ்ஸின் பிரிவான வனவாசி கல்யாண் ஆசிரமத்தின் உறுப்பினரான ஷேக்கின் தந்தையே ஷேக் சங்கத்தில் சேர காரணம். ”திறந்த மனதோடு இந்த தேசத்தை நினைப்பவர்கள் ஆர்.எஸ்.எஸ்ஸால் கவரப்படத்தான் செய்வார்கள். நானும் இதற்கு விதிவிலக்கல்ல. இந்தியாவிலுள்ள முஸ்லிம்களின் முன்னோர்கள் அனைவரும் ஹிந்துக்களே. அவர்களுக்கு ராமரே தெய்வம். பாபர் அல்ல என்கிற” ஷேக் ஆர்.எஸ்.எஸ்ஸின் முஸ்லிம் பிரிவான ராஷ்ட்ரீய முஸ்லிம் மஞ்சின் உஜ்ஜயினி மாவட்ட பொறுப்பாளர். ஷேக் ஒரு பக்தி உணர்வுமிக்க முஸ்லிம். ரம்ஜான் நோன்பு உட்பட முஸ்லிம் பழக்கவழக்கங்களை விடாது கடைபிடிப்பவர். ஷாகாவில் தான் எனது நோன்பை முடிக்கிறேன் என்று கூறுபவர்.

ஷபனா ஆஸ்மி, 38 ஆசிரியை

ஷபனா ஆஸ்மி அரபி பாடத்தில் ஆசிரியை. ஆர்.எஸ்.எஸ்ஸில் சேர்ந்து ஒரு வருடமாகிறது. குடும்பத்தினரிடம் இருந்தே பல கண்டனங்கள் வந்தன. நண்பர்கள் கேலி செய்தனர். ஆனால் அவர்களிடம் நான் சொல்வது இதுதான், ”முதலில் இறைத்தூதரின் வாழ்க்கையையும் உங்கள் மதத்தையும் நன்கு படியுங்கள்”. அவத் பிராந்தியத்தின் ராஷ்ட்ரிய முஸ்லிம் மஞ்சின் தலைவரின் உரையை ஒருமுறை கேட்டதில் ஊக்கம் பெற்று ஷபானா சங்கத்தில் சேர்ந்தார். சங்கத்தின் சமூக சேவையையும் ஷபானா பார்த்திருந்தார். ஒருதடவை லக்னோவில் இருந்து அஜ்மீர் சென்று கொண்டிருந்த பேருந்து விபத்துக்குள்ளானது. முதலில் அந்த இடத்திற்கு வந்தவர்கள் ஸ்வயம்சேவகர்கள். இந்நாட்டில் சிறுபான்மை யினரை உயர்த்துவதற்கு சங்கத்தில் சேர்வது என்று அன்றே தீர்மானித்து விட்டேன்.

அரசு நூலில் ஆர்.எஸ்.எஸ்

சங்கம் நாட்டில் பல்வேறு இடங்களில் துவக்கப்பட்டதன் மூலம் தனது பணியை விரிவாக்கியது. காசி, மத்ய மாகாணம், மகாராஷ்டிரா, டெல்லி, பஞ்சாப் ஆகிய இடங்களில் கிளைகள் துவக்கப்பட்டன. இதையடுத்து விரைவிலேயே, உபி, மத்திய இந்தியா, மகாகோசல், குஜராத், பீஹார், கர்நாடகா ஆகிய இடங்களில் துவங்கப்பட்டது. ஹிந்துவை வெல்ல முடியாதவனாக ஆக்குவதற்கு, அவனுக்குள், தேசிய, சமூக ஒற்றுமை உணர்வுகளை சங்கம் உருவாக்குகிறது என்பதை மக்கள் புரிந்து கொள்ளத் துவங்கினர். (‘நேஷனல் டைரக்டரி ஆஃப் பயகிராபி’ என்ற வாழ்க்கை வரலாற்றுத் தொகுப்பில் சங்கம் நிறுவிய டாக்டர்ஜி பற்றிய குறிப்பிலிருந்து).

ஃபைஸ் கான் (பசு பக்தர்)

சங்கத்துடனான கானின் தொடர்பு சற்று ஆச்சரியமான விஷயம். முழுநேர பசு பாதுகாப்பு ஊழியரான அவர் புனித பசுவைப் பற்றி பஜனை பாடுகிறார். ஜூன் மாதத்திலிருந்து லத்தாக்கில் இருந்து கன்னியாகுமரி வரை 3,000 கிலோ மீட்டர் பசுவின் நற்பண்புகளை, பெருமைகளை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடை பயணத்தை மேற்கொண்டுள்ளார். அரசியல் விஞ்ஞான பேராசிரியரான கான் முழு நேர சங்க பிரச்சாரகர் இல்லையென்றாலும் சங்கத்தின் வளர்ச்சிக்கு பாடுபடுபவர்களுள் ஒருவர். சங்கத்தின் செய்தி சொல்ல நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்யும் இவர் ஒரு பிரம்மச்சாரி. பசுவிற்காக மூன்று முதல் ஒன்பது நாட்கள் வரை முகாம்கள் நடத்துகிறார். பசுவை பற்றிய புனித கதைகளை கீதையில் இருந்தும் புராணங்களில் இருந்தும் எடுத்துக் கூறுகிறார். அவை அதிகமாக அவதி மொழியிலும் சமஸ்கிருத மொழியிலும் உள்ளன. ஒரு முஸ்லிம் மேடையில் அமர்ந்து பசுவைப் பற்றி பேசுவதை பார்க்க பொறுக்காதவர்களும் அவருடைய உரையை தொடர்ச்சியாக 5 நிமிடம் கேட்டால் அவருடன் சேர்ந்து பாடுவார்கள். நல்ல முஸ்லிமான கான் ரம்ஜான் 30 நாள் நோன்பை சிரத்தையுடன் மேற்கொள்வார். அதே நேரம் 1992 பாபர் மசூதி இடிக்கப்பட்டது பற்றி கவலை கொள்ளாதவர். மக்களின் கோபத்தால் தான் பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டதே தவிர அதற்கு ஆர்.எஸ்.எஸ் காரணம் அல்ல என்ற கருத்தை உடையவர்.

One thought on “‘ஆர்.எஸ்.எஸ் ஓர் திறந்த புத்தகம்’ விவரிக்கும் அதிகம் அறியப்படாத பரிமாணங்கள்

Comments are closed.