மதம் மாற்றும் கிறிஸ்தவ பள்ளி

சென்னை ராயப்பேட்டையில் இயங்கி வரும் சி.எஸ்.ஐ மோகனன் கிறிஸ்துவ பள்ளியுடன் இணைக்கப்பட்ட விடுதியில் தங்கியுள்ள மாணவிகளை கிறிஸ்துவ மதத்தை பின்பற்ற பள்ளி நிர்வாகம் வற்புறுத்துவதாகவும் இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கவும் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் ஆணையத்தின் தலைவர் பிரியங் கணுங்கோ, தமிழக தலைமைச் செயலாளர் மற்றும் காவல் துறை இயக்குனருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், ‘விடுதியில் தங்கியுள்ள மாணவிகள் கிறிஸ்தவ மதத்தை பின்பற்ற நிர்வாகம் வற்புறுத்தி வருகிறது. கடந்த 6ம் தேதி அன்று தமிழ்நாடு மாநில குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் நல ஆணைய தலைவர் சரஸ்வதி ரங்கசாமி மற்றும் உறுப்பினர்கள் சரண்யா ஜெயக்குமார் உள்ளிட்டோர் விடுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். பள்ளியுடன் இணைக்கப்பட்ட மாணவிகள் விடுதி பதிவு செய்யாமலும் மாணவிகளுக்கு பாதுகாப்பு இன்றியும் நடத்தப்படுகிறது. ஆணைய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஆய்வு முடித்து சென்ற பிறகு மாணவிகள் துன்புறுத்தப்பட்டுள்ளனர். அவர்களை அடுத்த 24மணி நேரத்தில் மீட்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார். ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு தஞ்சை பள்ளி மாணவி ஒருவர் கிறிஸ்தவ மதமாற்ற அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்ட சூழலில் தற்போது மீண்டும் சென்னையை சேர்ந்த கிறிஸ்தவ பள்ளி ஒன்று, மாணவிகளை கிறிஸ்தவ மதத்தை பின்பற்ற வற்புறுத்தும் குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.