நாமும் முயற்சிக்கலாமே?

தினமும் தன் இரு சக்கர வாகனத்தில் தன் மகளை பள்ளிக்கு அழைத்துச் செல்லும் ஒருவர் ஒரு வித்தியாசமான பழக்கத்தை கடைபிடித்தார். மகளுடன் செல்லும்போது ஏதாவது ஒரு கடையின் பெயர் பலகையை அவளை படிக்கச் சொல்வார். பின்னர் அந்தக் கடையைப் பற்றிய விவரங்களை அவளுக்கு விளக்குவார். அந்தக் கடையில் நடக்கும் வேலைகள், அதற்கான பொருள்கள், தயாரிக்கும் முறை என்று மகளுக்கு சொல்வார்.

உதாரணமாக ஒரு டீ கடை என்றால்…  ‘எனக்குத் தெரிந்தவர் இந்த கடைக்காரர். இங்கே 10 வருடமாக டீ கடை வைத்துள்ளார். தினமும் காலையில் 5 மணிக்கே கடையை திறக்க வேண்டும். 4 மணிக்கே எழுந்து விடுவார். ராத்திரி 10 மணி வரை கடை இருக்கும். ஒரு நாளில் 17 மணி நேரம் வேலை. அதில் முக்கால்வாசி நேரம் நின்றபடியேத்தான் இருப்பார். சில நேரங்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். யாரையும் காக்க வைக்க முடியாது. சுறுசுறுப்பாகவும் சுவையாகவும் டீ கொடுக்க வேண்டும்’ என அதில் வரும் வருமானம், சவால்களை விளக்குவார். மகளும் நிறைய கேள்விகள் கேட்பாள். அவற்றுக்கெல்லாம் பதில் சொல்லியவாறு தன் மகளை பள்ளியில் விடுவார்.

ஒரு நாள் வகுப்பில் ஆசிரியை பாடம் நடத்தும்போது ‘பூ விற்பவர்’ பற்றிய பேச்சு வந்தது. உடனே அந்த குழந்தை, அதுபற்றி தனக்குத் தெரிந்ததை எல்லாம் கோர்வையாக சொல்லிக்கொண்டே போனாள். அது மற்ற குழந்தைகளுக்கு மட்டுமல்ல, ஆசிரியைக்கும் தெரியாத பல செய்திகளை வெளிப்படுத்தியது. ஆசிரியையும் மற்ற குழந்தைகளும் வியந்து கைதட்டினர். தந்தைக்கு மானசீகமாக நன்றி சொன்னாள் அந்தக் குழந்தை.

பொதுவாக, பொருளாதார ரீதியாக எளிய பணிகளைச் செய்பவர்களை நம் குழந்தைகளுக்கு நாம் எப்படி அறிமுகம் செய்கிறோம்? ‘நீ சரியாக படிக்கவில்லை என்றால் இப்படித்தான் கூலி வேலை செய்து கஷ்டப்பட வேண்டும்’ என சொல்கிறோம். நம் குழந்தைகளுக்குள் பயத்தைப் புகுத்தி அதன் மூலம் பொறுப்பை உருவாக்க ஓர் உத்தியாக இதை நினைக்கிறோம். ஆனால், அதனால் அவர்களுக்குள் பயம் மட்டுமா உருவாகிறது? அந்தப் பணியைத் தாழ்வாகவும், அதைச் செய்பவர்கள் மீது குறைவான மதிப்பும் அல்லவா ஏற்படுகிறது? இங்கே செய்யப்படும் எல்லாவிதமான பணிகளும் முக்கியமானவைகளே. எல்லா மனிதர்களும் முக்கியமானவர்களே என்பதை நம் குழந்தைகளுக்கு உணர்த்துவது மிக முக்கியம். எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே. பின் நல்லவராவதும் தீயவராவதும் பெற்றோர்கள் வளர்ப்பினிலே.