ஆலய பிரவேசத்தின் முன்னோடி!

மதுரைக்கு 1937ம் ஆண்டு வருகை தந்த மகாத்மா காந்தி, மீனாட்சி அம்மன் கோயில் தரிசனத்துக்காக அழைத்துச் செல்லப்பட்டார். அந்தக் கோயிலுக்குள் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மக்களை அனுமதிப்பதில்லை என்பதைத் தெரிந்து கொண்ட அவர், தரிசனம் செய்ய மறுத்துவிட்டார். மேலும், அந்தக் கோயிலில் ஆலய நுழைவு போராட்டத்தை முன்னெடுக்குமாறு அங்கிருந்த காங்கிரஸ் தலைவர்களிடம் அறிவுறுத்தினார். காந்திஜி யின் வேண்டுகோள் 1939 ஜூலை 8-ம் தேதி நிறைவேறியது.

வைத்தியநாத ஐயர், முத்துராமலிங்க தேவர் தலைமையில் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மக்கள், மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் ஆலயப் பிரவேசம் செய்தனர். செய்தி அறிந்த காந்திஜி, தனது ஆசையை நிறைவேற்றியதற்காக தமிழகத்தை வெகுவாகப் பாராட்டினார். அது மட்டுமின்றி, இது தொடர்பாக வைத்தியநாத ஐயருக்கு கடிதம் மூலமும் தனது பாராட்டைத் தெரிவித்தார். மதுரை போராட்டத்தை அடுத்து தமிழகத்தில் உள்ள ஹிந்து கோயில்களுக்குள் அனைத்து ஜாதியினரும் நுழையலாம் என அவசர சட்டம் பிறப்பித்தார், அன்றைய சென்னை ராஜதானியின் முதல்வர் ராஜாஜி. போராட்டத்தை முன்னெடுத்த வைத்தியநாத ஐயர், ஜாதி விலக்கம் செய்யப்பட்டார்.

தஞ்சாவூர் மாவட்டம் விஷ்ணாம் பேட்டையில் அருணாசலம் அய்யர்-லட்சுமி அம்மாள் மகனாகப் பிறந்த வைத்தியநாத ஐயர், மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் பயின்றவர். மதுரைக் கல்லூரியிலும், சென்னை மாநிலக் கல்லூரியிலும் இளங்கலை பட்டப்படிப்பையும் படித்த பின்னர், சட்டம் பயின்று வழக்கறிஞராக மாறினார். புகழ்பெற்ற வழக்கறிஞராக இருந்த வைத்தியநாத ஐயர், நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் தன்னையும் தனது குடும்பத்தையும் ஈடுபடுத்திக் கொண்டார். அவரின் மனைவி அகிலாண்டமும், இரண்டு மகன்களும் சத்தியாகிரகத்தில் ஈடுபட்டு சிறைத் தண்டனை பெற்றனர்.

தனது மகளின் திருமணம், மகனின் மரணத்தின் போதும் கூட சிறையில் இருந்தவர் வைத்தியநாத ஐயர். ஹரிஜன சேவா சங்கத்தின் தலைவராகவும், மதுரை நகர காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் இருந்த வைத்தியநாத ஐயரின் வீட்டில் ஏராளமான பட்டியலின மாணவர்கள் தங்கியிருந்தனர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் மறைந்த முன்னாள் அமைச்சர் கக்கன்.வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகத்தில் ராஜாஜி கைதானதும், அங்கு நடந்த கூட்டத்தில் வைத்தியநாத ஐயர் தடையை மீறிப் பேசினார். அப்போது, அவரை ஆங்கிலேயர் அடித்து சித்திரவதை செய்து அரை கிலோ மீட்டர் தூரம் தரையில் இழுத்துச் சென்று உடலெங்கும் காயத்துடன் சிறையிலும் அடைத்தனர். 1934ல் மதுரையிலிருந்து நாகர்கோவிலுக்குச் சென்ற வைத்தியநாத ஐயர், அங்கிருந்த நாகநாதசுவாமி கோயிலில் நாடார், பட்டியலின மக்களை தரிசனம் செய்ய வைத்தார். இதுபோல பல கோயில்களுக்கும் ஒடுக்கப்பட்ட மக்களை இவர் அழைத்துச் சென்றுள்ளார்.

வைத்தியநாத ஐயர், மதுரை மேலூர் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராக வும் இருந்துள்ளார். தேசத்துக்கும் பட்டியலின மக்களுக்கும் தனது வாழ்வை அர்ப்பணித்த அவர் 1955 பிப்ரவரி 23ம் தேதி கால மானார். மதுரையில் பட்டியலின மக்களின் முன்னேற்றத்துக்காக அவரால் தொடங்கப் பட்ட சேவாலயத்திலும், சென்னை தக்கர் பாபா வித்யாலயாவிலும் நினைவு தினம் ஆண்டுதோறும் அனுசரிக்கப் படுகிறது. தமிழகத்தில் பட்டியலின மக்களின் முன்னேற்றம் பற்றி பேசும்போதெல்லாம் வைத்தியநாத ஐயரின் பெயர் நினைவு கூரப்படும்.