பெண் அரசியல்வாதிகளுக்கு பயிற்சி முகாம்

பெண் அரசியல் தலைவர்களின் தலைமைத்துவ திறன்களை மேம்படுத்துவதற்காக, அனைத்து மட்டங்களிலும் உள்ள பெண் பிரதிநிதிகளுக்கான ‘அவள் ஒரு மாற்றம் செய்பவள்’ என்ற அனைத்திந்திய திறன் மேம்பாட்டு திட்டத்தை தேசிய மகளிர் ஆணையம் அறிமுகப்படுத்தி உள்ளது. இதில், பெண் அரசியல் தலைவர்களின் முடிவெடுக்கும் திறன், பேச்சு, எழுதுதல் போன்ற தகவல் தொடர்பு திறன்களை மேம்படுத்தும் நோக்கத்துடன் பிராந்திய வாரியான பயிற்சி நிறுவனங்களுடன் இணைந்து திறன் மேம்பாட்டுத் திட்டம் மேற்கொள்ளப்படும். மகாராஷ்டிர மாநிலம் தாணேவில் உள்ள ராம்பாவ் மஹால்கி பிரபோதினியுடன் இணைந்து ‘அவள் ஒரு மாற்றம் செய்பவள்’ தொடரின் கீழ் பயிற்சி நிகழ்ச்சிகளின் அதிகாரப்பூர்வ துவக்கம் நடைபெற்றது. தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் ரேகா ஷர்மா இந்நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்து பேசுகையில், ‘அரசியலில் பெண்களின் பங்கேற்பை அதிகரிப்பது காலத்தின் தேவை. நாடாளுமன்றத்தை நோக்கிய அவர்களின் பயணத்தில் அவர்களுக்கு உதவ ஆணையம் உறுதி பூண்டுள்ளது. அரசியலில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்க விரும்பும் ஒவ்வொரு பெண்ணுக்கும் இத்திட்டம் பயனளிக்கும். சமூகத்தில் ஒரு நேர்மறையான மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் பெண்களின் வாழ்க்கையில் ‘அவள் ஒரு மாற்றம் செய்பவள்’ திட்டம் ஒரு புதிய தொடக்கத்தை உருவாக்கும் என்று நான் நம்புகிறேன்’ என்றார். ‘நகராட்சிகளில் உள்ள பெண்களுக்கான’ மூன்று நாள் திறன் மேம்பாட்டு திட்டம் டிசம்பர் 7 முதல் 9 வரை ஏற்பாடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.