போதைப்பொருள் சிக்கியது

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாக போதைப்பொருள்கள் கடத்தப்பட்டு வருவது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இதை கட்டுப்படுத்த, காவல்துறையுடன் இணைந்து, கடலோரக் காவல்படையினர், மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு மற்றும் உளவுப்பிரிவு அதிகாரிகள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் வழியாக போதைப்பொருள் கடத்தப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், தூத்துக்குடிக்கு வரும் சரக்கு பெட்டகங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வந்தன. அப்போது பிரேசில் நாட்டில் இருந்து தூத்துக்குடியைச் சேர்ந்த ஒரு நிறுவனத்திற்கு மரக்கட்டைகள் கொண்டு வந்த கன்டெய்னர் கப்பலில் சந்தேகப்படும்படியாக இருந்த 6 கன்டெய்னர்களை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் மடக்கி பிடித்தனர். அதில் கொக்கைன் உள்ளிட்ட சுமார் 300 கிலோ எடை கொண்ட போதைப்பொருட்கள் 28 மூட்டைகளில் பதுக்கி கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. சர்வதேச சந்தையில் இந்த போதைப்பொருட்களின் மதிப்பு ரூ.1,500 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது. இவை தமிழகத்தில் வினியோகம் செய்ய அல்லது வேறு மாநிலங்களுக்கு கொண்டு செல்ல கொண்டுவரப்பட்டதா, இந்த கடத்தலுக்கும், சர்வதேச கடத்தல் கும்பலுக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.