சர்ச் வண்டவாளம் துரோகியை புனிதர் ஆக்கும் தில்லுமுல்லு

உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்த ஒரு நபருக்கு (கன்யாகுமரி தேவசகாயம் பிள்ளைக்கு) அடுத்த  ஆண்டு மே மாதம் ‘புனிதர்‘ பட்டம் அளிக்கப்படும் என்று போப் பிரான்ஸிஸ் அறிவித்துள்ளார். இது பலத்த சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. போப்பின் அறிவிப்புக்கு எதிரான கருத்துகளே மேலோங்கியுள்ளன.

திருவிதாங்கூர் ராஜ்யத்தின் வரலாற்றை துல்லியமாகப் பதிவு செய்துள்ள சரித்திரப் பேராசிரியர் நாகம் ஐயா, “மதம் மாற்றுவதற்காகவே பாதிரிகள் பொய்யுரைகளை பரப்பியுள்ளனர். அதிசயங்கள் என்று கூறப்படுபவை அனைத்தும் உண்மைக்குப் புறம்பானவையே” என்று குறிப்பிட்டுள்ளார்.

“தேவசகாயம்பிள்ளை கிறிஸ்தவ பிரசங்கத்தை தீவிரமாக மேற்கொண்டார். மதமாற்றத்தில் முனைப்பு காட்டினார். இதற்காகவே அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இறுதியாக அவர் சுட்டுக்கொல்லப்பட்டார் என்பதில் துளியும் உண்மை கிடையாது” என்பதை பிரசித்தி பெற்ற வரலாற்று ஆசிரியர் ஸ்ரீதர மேனன் ஆணித்தரமாக உரைத்துள்ளார். அவரது நேர்காணல் 2004 ஜனவரி 20 அன்று  ’தி பயோனியர்’ ஆங்கில நாளிதழில் வெளிவந்துள்ளது.

 தேவசகாயம்பிள்ளை மதமாற்றம் செய்து வந்தார் என்று கூறப்படுகின்ற காலகட்டத்தில் ஐரோப்பாவில் புராட்டஸ்டண்டுகளுக்கும் கத்தோலிக்க கிறிஸ்தவர்களுக்கும் இடையே உக்கிரமாக சண்டை நடைபெற்று வந்தது. ரத்தக்களரி உச்சம் பெற்று வந்தது. இத்தகைய நிலையில் புராட்டஸ்டண்டான டிலானாய், நீலகண்டன் பிள்ளையை கத்தோலிக்க கிறிஸ்தவராக ஞானஸ்தானம் பெறும் பொருட்டு வடக்கன் குளத்துக்கு அனுப்பி வைத்தார் என்பது முழுப்பொய்.

திருவிதாங்கூர் வரலாற்றை எழுதியுள்ள சரித்திர வல்லுநர் டி.கே. வேலுப்பிள்ளை, மகாராஜா மார்த்தாண்ட வர்மா காலத்தில் மூன்று காரணங்களுக்காக மட்டுமே மரண தண்டனை விதிக்கப்பட்டது என்பதை அழுத்தம் திருத்தமாக குறிப்பிட்டுள்ளார்.

கிளர்ச்சியை தூண்டிவிட்டு மகாராஜாவைக் கொல்ல முயற்சி செய்வது, படுகொலை, கோஷ்டியாக சென்று கொள்ளையடித்தல், ஆகியவை
தான் இந்த காரணங்களாகும். இவற்றைக் கவனத்தில் கொண்டு பார்த்தால் மன்னருக்கு எதிராக சதி செய்து அவரது உயிருக்கு ஊறு விளைவிக்க தேவசகாயம் பிள்ளை முயன்றிருக்கக் கூடும். இது மரணதண்டனைக்கு உரிய குற்றம்தான்.  இதை திசைதிருப்புவதற்
காகவே மதமாற்ற நடவடிக்கையில் ஈடுபட்டதற்காக தேவசகாயம் கைது செய்யப்பட்டார். இறுதியாக சுட்டுக்கொல்லப்பட்டார் என்று வரலாற்றை பாதிரிகள் திரிக்கிறார்கள் என்பது அப்பட்டமாக புலனாகிறது.

உண்டவீட்டுக்கு ரெண்டகம் செய்த ராஜ துரோகிக்கு புனிதர் பட்டம் அளிப்பது மகாராஜா மார்த்தாண்ட வர்மாவை இழிவு படுத்துவதாகும். மத நல்லிணக்கத்துக்காக செயல்பட்ட அந்த ஹிந்து மன்னரை அவமதிப்பதாகும்.

கிறிஸ்தவ பாதிரிகள் புதிதாக கூட்டம் சேர்க்க புனைவுகளை அவிழ்த்து விட்டுக்கொண்டிருக்கிறார்கள். இந்த கட்டுக்கதைகளை நிர்மூலமாக்காமல் ஹிந்துக்கள் அசிரத்தையாக இருந்தால், அது பாதிரிகளுக்கு மேலும் ஊக்கத்தை அளிக்கும்.

கிறிஸ்தவர்கள் பரப்பும் விஷம்

திருவிதாங்கூர் ராஜ்யத்தில் நாயர் குடும்பத்தில் பிறந்தவர் நீலகண்டன் பிள்ளை. அவரது தந்தை பெருமாள் கோவிலில் அர்ச்சகராக இருந்தார். திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்ட வர்மாவுக்கு நீலகண்டன் பிள்ளையின் தந்தை ஓரளவு நெருக்கமாக இருந்தார். இதனடிப்படையில்தான் அரண்மனையில் நீலகண்டன் பிள்ளைக்கு வேலை கிடைத்தது. திவான் ராமய்யன் தளவாயின் கவனத்தை நீலகண்டன் பிள்ளை ஈர்த்தார். இதையடுத்து மகாராஜாவின் பெரும் சேனையின் ஒரு சிறிய பகுதிக்கு நீலகண்டன் பிள்ளை தலைமை தாங்கினார். டச்சு கடற்படைத் தளபதி டிலானாய் 1741ல் திருவிதாங்கூர் மீது படையெடுத்தார். குளச்சல் போரில் தோற்கடிக்கபட்ட டிலானாய் சிறையில் அடைக்கப்பட்டார். மகாராஜா மார்த்தாண்ட வர்மா, டிலானாயை மன்னித்ததுடன் தனது ராஜ்யத்துக்கு விசுவாசமாக இருக்குமாறும் பணித்தார். மகாராஜாவின் சேனைத்தளபதியாக டிலானாய் பொறுப்பேற்றுக்கொண்டார். இந்த காலகட்டத்தில் டிலானாயுடன் நீலகண்டன் பிள்ளைக்குத் தொடர்பு ஏற்பட்டது. இந்தப் பழக்கம் நாளடைவில் நெருக்கமானது. டிலானாய் புரட்டஸ்டெண்ட் கிறிஸ்தவர். அவர் நீலகண்டன் பிள்ளையை வடக்கன்குளம் கிராமத்துக்கு அனுப்பி ரோமன் கத்தோலிக்கராக ஞானஸ்தானம் பெற வைத்தார். அங்கு நீலகண்டன் பிள்ளையின் பெயர் லாஸரஸ் என்று மாற்றப்பட்டது. இதுவே உள்ளூர் வழக்கப்படி தேவசகாயம் என்று அழைக்கப்பட்டது. அவரது மனைவி பார்கவியும் மதம் மாறினார். அவரது பெயரும் தெரசா (ஞானப்பூ) என்று மாற்றப்பட்டது. ‘தேவசகாயம் பிள்ளை மதமாற்ற நடவடிக் கையில் ஈடுபட்டார். இதைத் தடுக்க அவர்மீது தேசத் துரோக குற்றம் சாற்றப்பட்டது. இறுதியில் அவர் ஆரல்வாய் மொழியில் சுட்டுக்கொல்லப்பட்டார். உயிரோடு இருந்தபோது மட்டுமல்லாமல் இறந்தபிறகும் அவர் பல அதிசயங்களை நிகழ்த்தி வருகிறார்‘  என்று கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் புனை கதைகளை தொடர்ந்து பரப்பி வருகிறார்கள்.