விஞ்ஞானி நம்பி நாராயணன் வழக்கு

இஸ்ரோவின் முக்கியமான ராக்கெட் தொழில்நுட்பத்தை, வெளிநாட்டிற்கு விற்க முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டு இந்திய விண்வெளி ஆய்வு மைய முன்னாள் விஞ்ஞானி, நம்பி நாராயணன் மீது 1994ல், கேரளாவில் வழக்கு தொடரப்பட்டது. இதனால், நம்பி நாராயணன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த சி.பி.ஐ, நம்பி நாராயணன் குற்றமற்றவர் என நீதிமன்றத்தில் தெரிவித்தது. அவருக்கு இழப்பீடு வழங்கவும் தவறு செய்த காவல் அதிகாரிகளை கண்டறியவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்காக அமைக்கப்பட்ட குழு, அதன் இடைக்கால அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் சமீபத்தில் தாக்கல் செய்தது. இதனையடுத்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் விரைவில் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.