தமிழக மாணவர் சாதனை

விஞ்ஞான பாரதி (அறிவியல் சங்கம்) அமைப்பு, விக்யான் பிரசார் மற்றும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலுடன் இணைந்து, பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் மனப்பான்மையை வளர்க்க ‘வித்யார்த்தி விக்ஞான் மந்தன்’ என்ற ஒரு போட்டித் தேர்வை ஏற்பாடு செய்திருந்தது. ஆன்லைன் மற்றும் நேரடி போட்டிகளாக நடைபெற்றது. தமிழகத்தில் 122 பள்ளிகளில் இருந்து 6,511 மாணவர்கள், தனி தேர்வர்களாக 2,657 மாணவர்கள் என மொத்தம் 9,168 மாணவர்களும் புதுவையில் இருந்து 1,039 மாணவர்களும் இந்த தேர்வை எழுதினர். பாரதத்தின் மிகப்பெரிய ‘அறிவியல் திறமை தேடல்’ போட்டியான இதில், சி.பி.எஸ்.இ, ஐ.சி.எஸ்.இ மற்றும் மாநில கல்வி வாரியங்களின் கீழ் படிக்கும் 6ம் வகுப்பு முதல் 11ம் வகுப்பு வரையிலான மாணவ மாணவியர் பங்கேற்றனர். தேர்வுகள், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஆங்கிலம், ஹிந்தி, மராத்தி, குஜராத்தி, பஞ்சாபி, பெங்காலி, ஒடியா மற்றும் அசாமி உள்ளிட்ட 13 மொழிகளில் நடத்தப்பட்டது. இதில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், தேசிய அறிவியல் ஆய்வகங்கள் மற்றும் மையங்களுக்குச் செல்லவும், நாட்டின் புகழ்பெற்ற விஞ்ஞானிகளுடன் தொடர்பு கொள்ளவும் வாய்ப்பு கிடைக்கும். இந்த போட்டிகளின் தேசிய அளவிலான இறுதி போட்டி பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள ஐ.ஐ.டியில் நடைபெற்றது. இந்த போட்டியில் தமிழகம், மயிலாப்பூர் வித்யா மந்திர் பள்ளியை சேர்ந்த மாணவரான ஆதித்யா நீரஜ் 11ம் வகுப்பு பிரிவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.