மூன்று கோடி பேர் ஆதரவு

தமிழக கோயில்களை அரசு கட்டுபாட்டிலிருந்து விடுவிக்க கோரி சத்குரு ஜக்கி வாசுதேவ் துவக்கியுள்ள ‘கோவில் அடிமை நிறுத்து’ எனும் இயக்கத்திற்கு பொதுமக்கள், அரசியல்வாதிகள், சினிமா பிரபலங்கள் உட்பட சமூகத்தின் பல்வேறு தரப்புகளில் இருந்தும் ஆதரவு பெருகியுள்ளது. அந்த வகையில் மூன்று கோடிக்கும் மேற்பட்ட மக்கள் தங்களின் ஏகோபித்த ஆதரவினை மிஸ்டு கால்கள் வழியாகவும் சமூக வலைதளங்களின் வாயிலாகவும் அளித்துள்ளனர். இது தொடர்பாக சத்குரு, ‘மூன்று கோடிக்கும் மேற்பட்ட தமிழரின் நெஞ்சார்ந்த விருப்பத்தை இதன்மூலம் தெரிவிக்கிறேன். தமிழகத்தின் ஆன்மாவை முழு பொலிவிற்கு மீட்டெடுத்தவராய் நீங்கள் என்றென்றும் நினைவுக் கூரப்பட, பொறுப்புள்ள அரசியல் தலைவர்களாய் திராவிட பெருமையின் மையமான கோயில்களை விடுவிக்குமாறு மன்றாடி கேட்கிறேன்’ என்று சத்குரு அவர்கள் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும், எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலினுக்கும் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கோரிக்கை விடுத்துள்ளதுடன் இதனை விளக்கி கடிதமும் எழுதியுள்ளார்.