ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர்

ஸ்ரீராமகிருஷ்ண குருகுல மரபைச் சேர்ந்தவர்  சுவாமி சித்பவானந்தர். பொள்ளாச்சி, செங்குட்டைப்பாளையத்தில் பிறந்தார். சிறுவயது முதலே பல சாதுக்களின் சீரிய வழிகாட்டுதல்கள் கிடைத்தன. வெளிநாடு சென்று படிக்க, ஏற்பாடுகள் செய்ய சென்னை வந்தபோது ‘சுவாமி விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்’ என்ற நூலைப் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அது இவரது மனதில் பல மாற்றங்களை ஏற்படுத்தியது. வெளிநாடு செல்லும் எண்ணத்தைக் கைவிட்டார்.

சென்னை மாநிலக் கல்லூரியில் பயின்றார். தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம் உள்ளிட்ட மொழிகளில் புலமை பெற்றார். தாயின் மறைவால் வேதனை அடைந்தவர், மன அமைதிக்காக அவ்வப்போது மயிலாப்பூர் ஸ்ரீராமகிருஷ்ண மடத்துக்குச் சென்றுவர ஆன்மிகத்திலும், துறவறத்திலும் நாட்டம் பிறந்தது. கல்லூரிப் படிப்பை முடிக்காமலேயே ராமகிருஷ்ண மடத்தின் சுவாமிகளுடன் கல்கத்தா சென்றார். பேலூர் மடத்தில் இவருக்கு பிரம்மச்சர்ய தீட்சை அளித்து ‘த்ரயம்பக சைதன்யர்’ என்று பெயர் சூட்டப்பட்டது. ஊட்டி ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் இவருக்கு சன்னியாச தீட்சை அளித்து ‘சுவாமி சித்பவானந்தர்’ என்று பெயர் சூட்டப்பட்டது.

உதகை ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் தலைவராக 1930 முதல் 1940 வரை இருந்தார். பின்னர், திருப்பராய்த்துறையில் ராமகிருஷ்ண தபோவனம், ஆரம்பப்பள்ளி, குருகுல முறையில் விவேகானந்த வித்யாவன நடுநிலைப்பள்ளி, விவேகானந்த மாணவர் விடுதி என அடுத்தடுத்து ஏராளமான கல்வி நிறுவனங்களையும், திருவேடகத்தில் ராமகிருஷ்ண மடம், பெண்களுக்கான சாரதா தேவி சமிதியும் தொடங்கினார். தலைசிறந்த படைப்பாளியாகவும் மலர்ந்தார். ‘தர்ம சக்கரம்’ என்ற மாத இதழை நடத்தினார்.

இதிகாசங்கள், வேதாந்த நூல்கள், பகவத்கீதை, திருவாசகம் ஆகியவற்றுக்கான உரைகள், சிறுவர் கதைகள், நாடகம்,  என 130க்கும் அதிகமான நூல்களைப் படைத்துள்ளார். 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சொற்பொழிவுகள் நிகழ்த்தியுள்ளார். சுவாமி ராமகிருஷ்ணர், விவேகானந்தரின் செய்திகளைத் தமிழகத்தில் பரப்பியதில் முக்கிய பங்கு வகித்தவர் இவர்.

சுவாமி சித்பவானந்தர்  பிறந்த தினம் இன்று