சிவாலய ஓட்டம்

மகா சிவராத்திரியை முன்னிட்டு குமரியில் 12 சிவாலயங்களை 110 கி.மீ. தூரம் ஓடியபடி வழிபடும் சிவாலய ஓட்டம் நேற்று துவங்கியது. வேறு எங்கும் இல்லாத பாரம்பரிய ஆன்மிக நிகழ்வான இது, திருவிதாங்கூர் மன்னர் ஆட்சிக்காலத்தில் இருந்தே குமரி மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் விரதமிருந்து காவி உடை, கையில் விசிறியும், திருநீறு பை சகிதமாக ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷத்தோடு, சிவராத்திரிக்கு முந்தைய தினம் தங்கள் ஓட்டத்தை தொடங்குவர். நேற்று அதிகாலையில் புதுக்கடை அருகே உள்ள முஞ்சிறை மகாதேவர் கோயிலில் இருந்து சிவாலய ஓட்டம் நிகழ்ச்சி தொடங்கியது. திக்குறிச்சி மகாதேவர் கோயில், திற்பரப்பு மகாதேவர் கோயில், திருநந்திக்கரை சிவன் கோயில், பொன்மனை தீம்பிலான்குடி மகாதேவர் கோயில், திருப்பன்றிபாகம் சிவன் கோயில், கல்குளம் நீலகண்ட மகாதேவர் கோயில், மேலாங்கோடு சிவன் கோயில், திருவிடைக்கோடு மகாதேவர் கோயில், திருவிதாங்கோடு மகாதேவர் கோயில், திருப்பன்றிகோடு மகாதேவர் கோயில் ஆகிய கோயில்களை ஓடியே சென்று வணங்குவர். கடைசியாக 12-வது கோயிலான நட்டாலம் சங்கரநாராயணர் கோயிலில் சிவாலய ஓட்டம் இன்று நிறைவுபெறும். இதில் வயது முதிர்ந்தோரும், இயலாதவர்களும் வாகனங்களில் சென்று வழிபடுவதும் உண்டு.