நாராயணசாமியை மாற்றுங்கள்

காங்கிரசின் கோட்டையாக கருதப்பட்ட புதுச்சேரியில் கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணியுடன் பா.ஜ.க ஆட்சியை கைப்பர்றியது. வெறும் இரண்டு இடங்களில் மட்டுமே காங்கிரஸ் வெற்றிபெற்றது. இது காங்கிரசாரை அதிர்ச்சியடைய வைத்தது. புதுச்சேரியில் கட்சியையும், நிர்வாகத்தையும் மறுசீரமைப்பு செய்ய கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியில் இருக்கும் 42 நிர்வாகிகள் ராகுல் காந்திக்கு புகார் கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கின்றனர். அக்கடிதத்தில், “புதுச்சேரி காங்கிரசின் மண். ஆனால் வெறும் இரண்டு இடங்களை மட்டுமே காங்கிரஸ் வென்றுள்ளது. கட்சித் தலைமை தோல்விக்கான காரணம் குறித்து ஆராய குழுவை அனுப்பியது. அக்குழுவிடம் காங்கிரஸ் மாநில தலைவர் ஏ.வி.சுப்பிரமணியனை மாற்ற கோரிக்கை வைத்தோம். ஆனால் ஓராண்டாகியும் அவர் மாற்றப்படவில்லை. வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற வேண்டுமென்றால் கட்சித் தலைவரையும் மக்கள் மற்றும் கட்சித் தொண்டர்களிடம் நம்பிக்கை இழந்துள்ள முன்னாள் முதல்வர் நாராயணசாமியையும் புதுச்சேரி அரசியலிலிருந்து தள்ளி வைக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளனர்.