வீடு தேடிவரும் உயிர்வாழ் சான்று

மாநில அரசின் ஓய்வூதியம் / குடும்ப ஓய்வூதியம் பெறுவோர், 1 ஜூலை 2022 முதல் 30 செப்டம்பர் 2022 வரை, அவர்களது வீட்டில் இருந்தபடியே டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை, தபால்காரர்கள் மூலம் சமர்ப்பிக்க சென்னை நகர மண்டல அஞ்சல்துறை சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழக அரசுக்கும், மத்திய அரசின் அஞ்சல்துறையின் கீழ் இயங்கும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கிக்கும் இடையே  கையெழுத்தாகியுள்ளது. நேரில் சென்று உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க ஓய்வூதியதாரர்கள் படும் சிரமங்களை தவிர்க்கும் விதமாக, ஜீவன் பிரமான் திட்டத்தின் மூலம், அஞ்சல்துறையின் கீழ் செயல்படும் “இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி”, ஓய்வூதியதாரர்கள் வீட்டில் இருந்தபடியே கைவிரல் ரேகையை பயன்படுத்தி, டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க ஏற்பாடு செய்துள்ளது. இதற்கு சேவை கட்டணமாக, தபால்காரரிடம் ரூ.70 ரொக்கமாக செலுத்த வேண்டும்.ஓய்வூதியதாரர்கள் தங்களது பகுதிக்குரிய தபால்காரரிடம் ஆதார் எண், செல்போன் எண், .பிபி.ஓ எண் மற்றும் ஓய்வூதிய கணக்கு விவரங்களை தெரிவித்து கைவிரல் ரேகையை பதிவு செய்தால், ஒரு சில நிமிடங்களில் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க முடியும்.