முஸ்லிம் நாடுகளின் வாயை அடைக்கும் சீனா

சீனாவில் சின்ஜியாங் தன்னாட்சி பகுதி மிக மோசமான கலாச்சாரம், இன இனப்படுகொலையை சந்தித்து வருகிறது. பூர்வீக இனமான உய்குர் மக்களுக்கும் சீன அரசுக்கும் இடையில் பல முரண்பாடுகள் உள்ளன. சீனா, உய்குர்களை பழங்குடி மக்கள் என வகைப்படுத்த மறுத்து அவர்களை பிராந்திய சிறுபான்மையினராக வகைப்படுத்துகிறது. சீனாவில் உள்ள 55 சிறுபான்மையினரில் ஒருவரான உய்குர்கள் மத்திய, கிழக்கு ஆசியாவை சேர்ந்த துருக்கிய இனக்குழு. இவர்களை நாஜிக்கள் பாணியில், தடுப்பு முகாம்களில் வைப்பது. கட்டாய கருத்தடை, கட்டாய கருக்கலைப்பு, பாலியல் பலாத்காரம், அடிமை வேலை, எலிகளைப்போல மருத்துவ சோதனைக்கு ஆட்படுத்துவது, மின்சாரம் செலுத்துவது, நகங்களை பிடுங்குவது, கொல்வது என எண்ணற்ற சித்ரவதைகளை செய்கிறது சீனா. மேலும், அவர்கள் கம்யூனிஸ்ட் கட்சி கொள்கைகளை படிக்க வேண்டும். இஸ்லாத்தை விமர்சிக்க வேண்டும் என கட்டாயப்படுத்தப்படுகின்றனர். இது குறித்து அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகள் வேதனை தெரிவித்தாலும் முஸ்லிம் நாடுகள் இது குறித்து வாய் திறப்பதில்லை. இதற்காக அந்நாடுகளுக்கு பணத்தை கொடுத்து அவர்களின் வாயை சீனா அடைத்துவிட்டது என உய்குர் இன சமூக ஆர்வலரும் இஸ்தான்புல், சபாஹட்டீன் ஜைன் பல்கலைக்கழகத்தில் இணை பேராசிரியருமான டாக்டர் புர்ஹான் உலுயோல் தெரிவித்துள்ளார்.