உயிர் காக்கும் ரத்த தானம்

கொரோனா காலத்தில் தேவைப்படும் ரத்த தானம் செய்ய ராஷ்டிரிய ஸ்வயம்சேவக சங்கம் – ஜன கல்யாண் சமிதி மற்றும் சமர்த் பாரத் அபியான் அமைப்பு விடுத்த வேண்டுகோளை ஏற்று புனேவில் ரத்த தான முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. கடந்த பதினைந்து நாட்களில், எட்டு வெவ்வேறு பகுதிகளில் 26 ரத்த தான முகாம்கள் நடைபெற்றன. இதில் 1,240 ரத்தப் பைகள் சேகரிக்கப்பட்டுள்ளன. 600க்கும் மேற்பட்டோர் பிளாஸ்மாவை நன்கொடையாக அளித்துள்ளனர். இளைஞர்களும் பெண்களும் ஆர்வமாக ரத்த தானம் செய்தனர். இது 1,500 க்கும் மேற்பட்ட மோசமான நோயாளிகளின் உயிரைக் காப்பாற்றியுள்ளது. புனேவில் உள்ள 12 ரத்த வங்கிகள் இதற்கான உதவிகளை செய்திருந்தன. கணேஷ் மண்டல்கள், கோயில் அறக்கட்டளைகள், அவற்றின் தன்னார்வ தொண்டர்கள் பலரும் இதில் கலந்துகொண்டனர்.

கொரோனா காலத்தில் ரத்தத்தின் தேவை அதிகரிக்கும். அதே நேரம் இரண்டு தவணை கொரோனா தடுப்பூசிகளை நாம் போட்டுக்கொள்ளும்போது நம்மால் சுமார் 60 நாட்களுக்கு ரத்த தானம் செய்ய முடியாது. இதனை கருத்தில் கொண்டு நாம் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளும் முன்பாக ரத்த தானம் செய்வது நல்லது.