மோடியிடம் ஆட்டோகிராப் கேட்ட ஜோ பைடன்

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, ஜி7 மாநாட்டில் கலந்துகொண்டப் பிறகு பப்புவா நியுகினியா மற்றும் ஆஸ்திரேலியா செல்கிறார். வரும் செவ்வாய்க்கிழமை சிட்னி செல்லும் பிரதமர் மோடி, ஆஸ்திரேலிய தொழிலதிபர்களை சந்தித்து பேசுகிறார். பிறகு அந்நாட்டில் வசிக்கும் பாரத சமூகத்தினருடன் கலந்துரையாடுகிறார். இதேபோல வரும் ஜூன் மாதம், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் அழைப்பின் பேரில் அந்நாட்டிற்கு செல்லும் மோடி, வெள்ளை மாளிகையில் நடக்கும் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் தற்போது நடைபெறும் ஜி7 மாநாட்டிற்கு இடையே, குவாட் அமைப்பின் மாநாடு நடந்தது. இதில், நரேந்திர மோடி, ஜோ பைடன், அந்தோணி அல்பானீஸ், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிதா ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது, மோடியிடம் ஆஸ்திரேலிய பிரதமர் மற்றும் அமெரிக்க அதிபர் சில சுவாரசியத் தகவல்களை பகிர்ந்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் “சிட்னியில் பாரத வம்சாவளியினர் சந்திப்பு நகழ்ச்சியில் பங்கேற்க டிக்கெட் கேட்டு ஏராளமான அழைப்புகள் எனக்கு பிரத்தியேகமாக வருகிறது. 20 ஆயிரம் பேர் அமரக்கூடிய அந்த மைதானத்தில் அனைத்து டிக்கெட்களும் எப்போதோ விற்றுத் தீர்ந்துவிட்டன. ஆனாலும் இன்னும் டிக்கெட்டுகள் கேட்டு கோரிக்கைகள் வந்த வண்ணம் உள்ளது” எனக்கூறினார். பின்னர், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் 90 ஆயிரம் பேர் அமரக்கூடிய நரேந்திர மோடி மைதானத்தில் தனக்கு அளிக்கப்பட்ட வரவேற்பையும் அவர் நினைவு கூர்ந்தார்.

அப்போது பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், மோடியிடம் தனக்கும் இதேபோன்ற நிலை ஏற்பட்டுள்ளதாக கூறினார். “நான் உங்களிடம் ஆட்டோகிராப் வாங்க வேண்டும். வாஷிங்டன்னில் அடுத்த மாதம் உங்களுக்கு விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளோம். அமெரிக்காவில் இருந்து ஏராளமானோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்புகின்றனர். நான் நகைச்சுவை செய்கிறேன் என நினைத்தால், என்னுடைய குழுவினரை வேண்டுமென்றாலும் நீங்கள் கேட்டுப்பாருங்கள். உலக அளவில் நீங்கள் மிகவும் பிரபலமாகிவிட்டீர்கள். குவாட்டில் நாம் ஆற்றும் பணி உள்ளிட்ட அனைத்திலும் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி விட்டீர்கள்” என கூறினார்.