நீர்நிலையில் காவல் நிலையமா?

சென்னை உயர் நீதிமன்றத்தில் அறப்போர் இயக்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ‘காஞ்சிபுரம் மாவட்டம் செம்மஞ்சேரியில் புதிதாக காவல் நிலையம் கட்டப்பட்டுள்ள இடம் தாமரைக்கேனி என்ற நீர்நிலை. இந்த இடத்தை மேய்க்கால் புறம்போக்காக அறிவித்து காவல் நிலையம் கட்டப்பட்டுள்ளது. சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் (சி.எம்.டி.ஏ) ஒப்புதலை இதற்கு பெறவில்லை. எனவே, நீர்நிலையில் கட்டப்பட்டுள்ள காவல் நிலையத்துக்கு தடை விதிக்க வேண்டும். நீர்நிலையை பழைய நிலைக்கு மாற்ற உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அமர்வு, ‘காவல் நிலையம் நீர்நிலையில் கட்டப்பட்டிருப்பதாக உறுதிசெய்யப்பட்டால் அதை இடிக்க உத்தரவிடுவோம்’ என தெரிவித்தனர். புதிய கட்டடத்தில் காவல் நிலையம் செயல்பட தடை விதித்ததுடன் கூடுதலாக கட்டுமான பணிகள் எதையும் மேற்கொள்ளக் கூடாது என்று உத்தரவிட்டுள்ள நெதிமன்றம், காவல் நிலையம், நீர்நிலையில் கட்டப்பட்டதா என்பது குறித்து ஆய்வு செய்ய ஐ.ஐ.டி இயக்குநருக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஏப்ரல் 29ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.