கோயில் தங்கத்தை உருக்காதே

 கோயில்களுக்கு பக்தர்கள் வேண்டுதலின் பேரிலும், காணிக்கையாகவும் அளித்த தங்கத்தை உருக்கும் திட்டத்தை தமிழகத்தை ஆளும் தி.மு.க அரசு செயல்படுத்தி வருகிறது. இதற்கு ஹிந்துக்கள், ஹிந்து அமைப்பினர் என பலதரப்பில் இருந்தும் கடும் கண்டனங்கள் எழுந்தும் தன் திட்டத்தை நிறுத்த மறுக்கிறது. அதனை நியாயப்படுத்த பல்வேறு பொய்யான காரணங்களை எவ்வித ஆதாரத்தையும் அளிக்காமல் தொடர்ந்து கூறிவருகிறது.

இது கோயில் தங்கத்தை தி.மு.கவினர் கபளீகரம் செய்யும் முயற்சியாகவே ஹிந்துக்கள் கருதுகின்றனர். இந்நிலையில், இதுகுறித்து ஹிந்துக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தி.மு.க அரசு செய்யும் ஹிந்துக்களுக்கு எதிரான அநீதிகளை எடுத்துரைக்கவும் இந்து முன்னணியின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன் தலைமையில் மாபெரும் ஒருவார கால பிரச்சார யாத்திரை நடைபெற உள்ளது. நேற்று சென்னை பார்த்தசாரதி கோயிலில் துவங்கிய இந்த யாத்திரை வேலூர் செல்லியம்மன் கோயில், திருச்சி ஸ்ரீரங்கம் கோயில், கோவை கோனியம்மன் கோயில், சேலம் கோட்டை மாரியம்மன் கோயில், மதுரை மீனாட்சியம்மன் கோயில், நெல்லை நெல்லையப்பர் கோயில் உள்ளிட்ட இடங்களில் நடைபெறும்.