கொரோனாவிற்கு ஆயுர்வேத மருத்துவம்

உலகின் மிகவும் தொன்மையான அறிவியல் சார்ந்த மருத்துவ முறைகளில் ஆயுர்வேதம் முதன்மையானதாகும். வியாதிகள் மற்றும் அதன் சிகிச்சைகளைப் பற்றி மட்டும் விரிவாக கூறாமல் நம்மிடம் நோய் வராமல் பாதுகாத்துக் கொள்வது எப்படி, நம் நோய் எதிர்ப்பு சக்தியை சிறந்த ஆற்றலுடன் வைத்துக் கொள்வது எப்படி என்று ஆயுர்வேதம் விரிவாக விளக்குகிறது. இப்போது உலகமே கொரோனா என்ற தொற்றுநோய் மத்தியில் தவித்துக் கொண்டிருக்கும் வேளையில் இத்தகைய தொற்றுநோய்களை நிர்வகிப்பதில் பதிலளிக்க முடியாத பல குறிகுணங்களுக்கும் உபாதைகளுக்கும் ஆயுர்வேதம் மூலம் தக்க பக்கவிளைவில்லாத பதிலளிக்க முடியும்.

தற்போது உள்ள சூழ்நிலையில் நாம் அதிகம் ஆன்டிபயோடிக் ஆன்டி-பாக்டீரியல் ஆன்டிமைக்ரோபியல் என்னும் மருந்துகளையே நாடி செல்கின்றோம் ஆனால் இதற்கெல்லாம் மிகவும் எளிமையான ஒரு வழி இருக்கிறது. அது நம் இம்யூனிட்டி அல்லது வியாதி க்ஷமத்துவம் என்ற நோய் எதிர்ப்பு சக்தியை திடமாக வைத்துக் கொள்வதே ஆகும். ஆயுர்வேதம் இதிலேயே அதிகம் கவனம் செலுத்துகிறது.

மனித உடலுக்கு எந்த ஒரு குறிப்பிடத்தக்க அறிகுறிகளையும் காட்டாமலேயே கிருமிகளுடன் போராடும் அற்புத திறன் உள்ளது. அந்த நபர் எப்போதும் போலவே ஆரோக்கியமாக இருப்பினும் உள்ளுக்குள் நம் நோய் எதிர்ப்பு சக்தியானது பல கிருமிகளுடன் போராடிக்கொண்டே இருக்கிறது, அதில் வெற்றியும் காண்கிறது. ஒருவேளை அறிகுறிகள் தெரிய வந்தாலும் நம் நோய் எதிர்ப்பு சக்தி அந்த அறிகுறிகள் லேசாக இருக்க கடினமாக உழைக்கிறது.

நமது ஆயுர்வேத மருத்துவமானது மேற்கூறிய எல்ல நிலைகளிலும் நோய் எதிர்ப்பாற்றலுக்கு உறுதுணையாக இருக்கிறது. நமது பாரதம் இதுபோல் பல தொற்று வியாதிகளை பல நூற்றாண்டுகளாக சந்தித்து அதில் வெற்றியும் கண்டுள்ளது. சுமார் 100 வருடங்களுக்கு முன்வரை இத்தகைய பேரழிவு தரும் தொற்று வியாதிகளில் இருந்து வெற்றிகரமாக மக்களை மீண்டு எடுத்து வந்திருப்பது நமது பாரம்பரிய மருத்துவமேயாகும். ஆயுர்வேதம் பல நூற்றாண்டுகளாகவே தொற்று நோய்களின் பேரழிவு தரும் விதத்தை மிகவும் நேர்த்தியாக குறிப்பிட்டு அதற்கு தற்காப்பு முறைகள், தீர்வு மருத்துவம் போன்றவற்றையும் விளக்கமாக எடுத்துரைத்திருக்கின்றது.

ஆச்சாரியர் சரகர் ஜனபதோதுவம்சம் என்ற அத்தியாயத்தில் தொற்று வியாதிகளை பற்றி விரிவாகக் கூறியுள்ளார். ஜனபதோதுவம்சம் என்ற வார்த்தைக்கு மக்களிடம் எளிதாக பரவி உயிர் கொல்லியாக மாறக்கூடியது என்று அர்த்தமாகும். ஆச்சாரியர் சுஸ்ருதர் காற்று மாசுபடும் விதத்தையும் அதற்கான அறிகுறிகளையும் அதற்கான சிகிச்சை முறைகளும் விவரித்துள்ளார். பெரிய அம்மை, மலேரியா போன்ற பல தொற்றுநோய்களை இந்தியா, ஆயுர்வேத சித்த மருந்துகள் மூலம் எதிர்கொண்டு வெற்றி கண்டுள்ளது. சமீபத்தில் தோன்றிய டெங்கு, சிக்கன்குனியாவிற்குக் கூட நமது மருத்துவம் நல்ல பலன் அளித்ததை நாம் எல்லோரும் அறிவோம்.

எனவே தற்போது உள்ள இந்த கொரோனா வைரஸ் தாக்குதலுக்கும் ஆயுர்வேத சித்தாந்தத்தை கொண்டு நன்றாக குணம் காணலாம். இதையேதான் ஆயுஸ்துறை, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, (மினிஸ்ட்ரி ஆஃப் ஹெல்த் அண்ட் ஃபேமிலி வெல்பெர்) ஆகிய மத்திய அமைச்சகங்களும் வற்புறுத்தி வருகின்றன. ஆயுர்வேதத்தில் தினச்சரியம் என்னும் நாள் ஒழுக்கம், ருதுச்சரியம் என்னும் மாத ஒழுக்கம் மற்றும் ஊட்டச்சத்தான அறுசுவை உணவு ஆகியவைகளை ஒருவர் சரியாக கடைபிடிப்பதன் மூலம் தன்னுடைய நோய் எதிர்ப்பாற்றலை ஆற்றலுடன் வைத்துக்கொள்வது மட்டுமில்லாமல் நரை திரை மூப்புபிணி ஆகியவற்றிலிருந்தும் தன்னை காத்துக் கொள்ளமுடியும்.

இத்தகைய தொற்றுநோய் காலத்தில் பின்பற்றவேண்டிய எளிமையான தற்காப்பு மற்றும் வைத்திய முறைகள்: அறுசுவை உள்ள சமமான ஊட்டச்சத்துள்ள உணவு, குறைந்தது 7 மணி நேரம் ஆழ்ந்த உறக்கம், தினசரி மூச்சுப்பயிற்சி, தினசரி குறைந்தது 30 நிமிடங்களாவது உடற்பயிற்சி, மனது அமைதியாக இருக்க தியானம், யோகா போன்றவைகளை தினசரி செய்வது ஆகியவை ஆரோக்கியத்தை பேணிக்காக்கும் மிகச் சிறந்த வழிகளாகும்.

நசியம் என்னும் மூக்கில் எண்ணெய் விடும் முறையில் ஆயுர்வேதத்தில் பிரசித்தி பெற்ற அணு தைலம் என்ற தைலத்தை மூக்கு துவாரங்களில் இரண்டு சொட்டுகள் தினமும் விட்டு அதே தைலத்தை மூக்கு துவாரங்களில் தடவியும் விடுவது தொற்றுக் கிருமிகள் உடலுக்குள் செல்லாமல் தடுக்க ஒரு அற்புதமான வழிமுறையாகும்.
காய்ச்சிய நல்லெண்ணெயை தினமும் 20 மில்லி அளவு எடுத்து காலை இரவு இரு வேளை வாய்க்குள் விட்டு இருபது நொடி நன்றாக கொப்பளித்து பின்னர் துப்பி விடவும், அதைத் தொடர்ந்து வெதுவெதுப்பான நீர் குடிக்க வேண்டும். இதை ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு முறை செய்யலாம். இது வாய் மற்றும் தொண்டை பகுதியில் நோய்க் கிருமியை அண்டவிடாமல் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க வல்லது.

சைந்தவ லவணம் என்னும் இந்துப்பை வெந்நீரில் கலந்து அல்லது இந்துப்பை சிறிது மஞ்சள் தூளுடனோ திரிபலா சூரணத்துடனோ கலந்து வாய் கொப்பளிக்க வாயில் கிருமி தொற்று ஏற்படாமல் பாதுகாக்கும். அவ்வப்போது ஓம விதைகளை புதினா இலையுடன் சேர்த்து கொதிக்கவைத்து அதை ஆவிபிடிக்க தொண்டை மற்றும் வாய் மூக்கு துவாரம் ஆரோக்கியத்துடன் நோய்த் தொற்று கிருமிகள் அண்டாமல் இருக்கும். வேப்ப இலையையும் தேங்காய் ஓட்டையும் கடுகையும் பெருங்காயத்தையும் சுத்தமான சாம்பிராணியையும் சேர்த்து வீட்டிற்குள் புகையை காட்டி வந்தால் காற்றிலுள்ள தொற்று கிருமிகள் மாசு ஆகியவற்றை அறவே நீக்கலாம்.

சர்க்கரை நோயாளிகள் கவனத்திற்கு
சர்க்கரை நோய் உள்ளவர்கள் இந்த காலகட்டத்தில் மிகவும் கவனமாக இருந்து தங்கள் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அடிக்கடி பரிசோதனை செய்து கொண்டு உணவுகளை மிகவும் கவனமாக அருந்தி தினமும் உடற்பயிற்சி செய்து தங்கள் பாஸ்டிங் பிளட் சுகர் எனப்படும் உணவுக்கு முன் வெறும் வயிற்றில் பார்க்கக்கூடிய சர்க்கரையின் அளவை 110 கீழ் வைத்துக்கொள்ளவும் உணவுக்குப் பின் பார்க்கக்கூடிய போஸ்ட்பிரண்டியல் பிளட் சுகர் அளவை 150க்கு கீழ் வைத்துக் கொள்ளவும் வேண்டும்.

அரிசியால் ஆன உணவை ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டும் எடுத்துக்கொண்டால் போதுமானது. நெல்லிக்காய் பொடியையும் மஞ்சள் பொடியையும் சேர்த்து 5 கிராம் அளவு வெந்நீரில் கலந்து காலையில் குடிப்பது மிகவும் சிறந்த வைத்தியமாகும். வெந்தயத்தை தண்ணீரில் ஊற வைத்து குடிப்பதும் சர்க்கரையை கட்டுப்படுத்த ஒரு அருமையான முறையாகும். திரிபலா சூரணம் இரவில் 5 கிராம் அளவு வெந்நீரில் கலந்து எடுத்துக்கொள்ளும்போது உடம்பில் உள்ள நச்சுப் பொருட்கள் நீங்குவதற்கு ஒரு வாய்ப்பாக அமையும். சர்க்கரை நோயாளிகள் தங்கள் சர்க்கரைக்கான மருந்துகளை சரியாக எடுத்துக் கொண்டு தங்கள் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ளவேண்டும்.

உயர் ரத்த அழுத்த நோயாளிகள் கவனத்திற்கு

உயர் ரத்த அழுத்தம் உள்ள நோயாளிகள், உணவில் உப்பையும், மசாலாவையும், குறைக்க வேண்டும். அடிக்கடி இரத்த அழுத்தத்தை கண்காணிப்பது, மருத்துவரின் ஆலோசனையின் படி மருந்துகள் எடுத்துக்கொள்வது மேலும் தியானம், பிராணயாமம், யோகா பின்பற்றுவது போன்றவற்றையும் தவறாது செய்து வர வேண்டும்.

ஆயுர்வேதத்தில் பல மருந்துகள் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும் தொற்று நோய் வந்தால் அதிலிருந்து விடுபடுவதற்கு கூறப்பட்டுள்ளது. அவ்வகை மருந்துகளில் ஏக்க மூலிகை பிரயோகம் எனப்படும் ஒரே ஒரு மூலிகையைக் கொண்டு செய்யப்பட்ட சூரணத்தை உட்கொள்வதில் அமுக்கிராங்கிழங்கு சூரணம், சீந்தில் சூரணம், நெல்லிக்காய் சூரணம் ஆகியவை குறிப்பிடத்தக்க சில மருந்துகளாகும். இவை ஐந்து கிராம் அளவு காலை இரவு இரு வேளை வெந்நீரிலோ தேனிலோ கலந்து சாப்பிட சிறந்த பலன் கொடுக்கும்.

அதேபோல் மூலிகைகளைக் கொண்டு செய்யப்பட்ட லேகியங்களான ச்யவனப்பிராச லேகியம், கூஷ்மாண்ட ரசாயனம், அகஸ்திய ரசாயனம், அகஸ்திய ஹரிடகி
போன்ற காயகற்ப லேகியங்களை 10 கிராம் அளவு காலை இரவு உணவுக்குப்பின் அருந்த நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க ஒரு அற்புதமான வழியாகும். இது தவிர இந்து காந்த கஷாயம் அமிர்தோத்தர கஷாயம் போன்றவை தினமும் 60 மில்லி அளவு காலை இரவு கஷாயம் செய்து சாப்பிட்டு வர நோய் எதிர்ப்பு சக்தி மட்டுமில்லாமல் ஒருவேளை நோய்க்கிருமிகள் நம்மை ஆட்க்கொண்டிருந்தாலும் அவற்றை வென்று நமது ஆரோக்கியத்தைப் பேணிக்காக்கும்.

ஒருவேளை அறிகுறிகள் தென்பட்டால் தாளிசாதி சூரணம், சிதோபாலாதி சூரணம், மகா சுதர்சன சூரணம், திருபுவன கீர்த்தி குளிகை, லட்சுமி விலாச குளிகை, திரிகடுகு மாத்திரை, பத்யாகுஸ்தும்பராதி கஷாயம் போன்றவை கொடுக்க நல்ல பலனை தந்து வருகிறது.தொண்டை வலி, கரகரப்பு இருக்கும்போது சப்தசதாதி கஷாயத்தை கொப்பளிப்பதாலும் கதிராதி வடி என்னும் மாத்திரையை வாயில் அடக்கிக்கொள்வதாலும் நல்ல பலன் தருகிறது.

கொரோனா பாதிப்பில் வயிறு சம்பந்தப்பட்ட அறிகுறிகள் தென்படுமெனில் வில்வாதி குளிகை தாடிமாஷ்டக சூரணம் நல்ல பலனை தருகிறது. பத்தியம் என்பது ஆயுர்வேத சிகிச்சையில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே நோயுற்ற காலத்தில் மிகவும் இலகுவான ஆகாரங்களை உண்ணுவதே சிறந்ததாகும். உப்பு, புளி, காரம், எண்ணெய், வறுத்தது, பொரித்தது ஆகியவற்றை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். புழுங்கல் அரிசி கஞ்சியுடன் சுக்கு சேர்த்து சாப்பிடுவது ஜீரணக் கோளாறு உள்ளவர்களுக்கு ஒரு சிறந்த உணவாக அமையும். வியாதி அறிகுறிகள் தென்பட்ட காலத்தில் உடலுக்கும் மனதிற்கும் அமைதி கொடுத்து ஓய்வு எடுப்பது நோயிலிருந்து சீக்கிரம் விடுபட வழிவகுக்கும்.
கட்டுரையாளர் : மருத்துவ இயக்குநர், சென்னை ஹெரிடேஜ் மருத்துவமனை.