மாவீரன் ஜெய்ஹிந்த் செண்பகராமன் பிள்ளை

அன்றைய திருவாங்கூர் சமஸ்தானத்துக்குட்பட்ட பகுதியில் “எட்டு வீட்டுப் பிள்ளைமார்” குடியில் பிறந்தவர். இவர் திருவனந்தபுரத்தில் வசித்தபோது அங்கு வசித்த ஒரு ஜெர்மானியர் அழைப்பின் பேரில் இவர் 1908ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி தனது பதினேழாம் வயதில் தாய்நாட்டை விட்டு ஜெர்மனிக்குச் சென்றார்.

 

தன்னுடைய அறிவு, ஆற்றல், செயல்பாடுகளால் அன்றைய ஜெர்மனியில் அதிபர் வில்லியம் கெய்சரைக் கவர்ந்தார்.பல மொழிகளைக் கற்றார்.பத்திரிகைகளையும் நடத்தினார்.டாக்டர் பட்டமும் பெற்றார்.அப்போது பாரதத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் சுதந்திரத்துக்காகக் குரல் கொடுக்கத் தொடங்கிய நேரம்.இவரோ ஜெர்மனியின் உதவியோடு ஆங்கிலேயர்களின் மீது போர் தொடுத்து அவர்களை விரட்டிவிட்டு பாரதத்தைச் சுதந்திர நாடாகப் பிரகடனம் செய்ய திட்டமிட்டார்.அதற்காக ‘இந்தியன் நேஷனல் வாலண்டியர்ஸ்’ அமைப்பை உருவாக்கினார்.இவர்தான் முதன் முதலில் தாய்நாட்டை வணங்க “ஜெய் ஹிந்த்” எனும் கோஷத்தை முழங்கினார்.இவரது அடிச்சுவட்டில்தான் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இந்திய தேசிய ராணுவத்தை அமைக்கவும், “ஜெய்ஹிந்த்” கோஷத்தை முழக்கமிடவும் தொடங்கினார்.

 

1914 தொடங்கி முதல் உலக மகா யுத்தம் நடைபெற்றது.ஜெர்மானிய நீர்மூழ்கிக் கப்பல்கள் பிரிட்டிஷாரின் கப்பல்களை உடைத்தெறிந்தன.அப்படிப்பட்டதொரு கப்பல்தான் ‘எம்டன்’.அது சென்னை கடற்கரைக்கு வந்து குண்டுகளை வீசியது.அந்த கப்பலில் தலைமை இன்ஜினீயராக வந்தவர் செண்பகராமன் பிள்ளை. யுத்தம் நடந்து கொண்டிருந்தபோது விமானத்தில் பறந்து பிரிட்டிஷ் பட்டாளத்தில் இருந்த பாரத சிப்பாய்களிடம் லட்சக்கணக்கான துண்டுப் பிரசுரங்களை வீசி, பிரிட்டனுக்கு எதிராக அவர்களது துப்பாக்கிகளைத் திருப்புமாறு கோரினார். ஜெர்மனியிடம் பிடிபட்ட ஆயிரக்கணக்கான பாரத யுத்தக் கைதிகளை மீட்டு மறுவாழ்வு அளித்தார்.

 

மெஸபடோமியா யுத்த கேந்திரத்தில் போராடிய சுதேசி இராணுவத்தைக் கொண்டு சூயஸ் கால்வாய் வழியாக பாரதத்திற்கு வரும் ஆங்கிலேயத் தளவாடங்களைத் துண்டித்து, உள்நாட்டில் நிகழ்ந்து கொண்டிருக்கும் விடுதலைப் புரட்சிக்கு உதவினார். ஹிட்லர் ஜெர்மனியின் அதிபராக ஆன பின்பு இவருக்குப் தொல்லைகள் ஆரம்பித்தன.ஹிட்லர் பாரதத்தை கேவலமாகப் பேசப்போக, அதனை கண்டித்த செண்பகராமன் ஹிட்லரை மன்னிப்பு கேட்க வைத்தார்.அதன் விளைவு 1936ல் வீரன் செண்பகராமன் மரணத்தைத் தழுவினார்.

 

மாவீரன் ஜெய்ஹிந்த் செண்பகராமனின் நினைவு தினம் இன்று.