மலர்ந்தது தாமரை

பூஜ்ஜியத்தில் இருந்து கணக்கு துவங்குவதால் பா.ஜ.க ஜெயிக்கும் ஒவ்வொரு தொகுதியும் அவர்களுக்கு வெற்றியே. பலத்த எதிர்ப்புகளை மீறி தமிழகத்தில் தாமரை மலர்ந்தது மட்டுமல்லாமல் புதுவையில் ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கிறது என்பது நல்ல செய்தி. ஆனால், இத்துடன் அவர்கள் சந்தோஷப்பட்டு நின்றுவிடக்கூடாது. வருங்காலத்தில் ஆட்சியை பிடிக்க அனைத்து முன்னெடுப்புகளையும் துவக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் இரண்டு வெற்றிகளுடன் கணக்கைத் துவங்கி தற்போது தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி, 2016ல் மூன்று தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்ற மேற்கு வங்கத்தில் தற்போது வலுவான எதிர்கட்சி என வளர்ச்சி பெற்றுள்ள அவர்கள் இனி தமிழகத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். கட்சியை சீர்படுத்துவது, களையெடுப்புகள், புதிய ரத்தம் பாய்ச்சுவது, கட்சி விரிவாக்கம், பட்டிதொட்டியெங்கும் கட்சியை வளப்படுத்துவது, புதிய பிரச்சார உத்திகள் என அவர்களுக்கு பல புதிய பணிகளும் பெறுப்புகளும் காத்துக்கிடக்கின்றன.