இலக்கியப் பேரறிஞர் ரா.பி.சேதுப்பிள்ளை

எழுத்தாலும், பேச்சாலும் தமிழுக்குப் பெருமை சேர்த்த அறிஞர்களுல் ஒருவர் ரா.பி.சேதுப்பிள்ளை. திருநெல்வேலி, ராசவல்லிபுரத்தில் பிறந்த இவர், சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பட்டம் பெற்றார். அங்கு ஆசிரியராகப் பணியாற்றிக்கொண்டே சட்டம் பயின்று வழக்கறிஞரானார். நகரமன்ற உறுப்பினராகவும், நகராட்சித் தலைவராகவும் பணியாற்றினார். அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் தமிழ் விரைவுரையாளராக 6 ஆண்டுகள் பணிபுரிந்தார். ஆங்கிலத்திலும் புலமை பெற்றிருந்தார். 25 ஆண்டுகள் சென்னை பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினார்.

தமிழ்ப் பேரகராதியைத் தொகுக்க வையாபுரிப் பிள்ளைக்கு உதவினார். வையாபுரிக்குப் பிறகு பேரகராதி தொகுப்புப் பணியை ஏற்றார். இவர் ஒரு சிறந்த மேடைப் பேச்சாளர். சென்னை ஒய்.எம்.சி.ஏ அரங்கில், கம்பராமாயணச் சொற்பொழிவை மூன்று ஆண்டுகள் நடத்தினார். கோகலே மன்றத்தில் 3 ஆண்டுகள் சிலப்பதிகார வகுப்பும் நிகழ்த்தினார். தங்கச்சாலை, தமிழ் மன்றத்தில் வாரம் ஒருநாள் என ஐந்து ஆண்டுகளுக்கு திருக்குறள் விளக்கவுரை, கந்தக்கோட்ட மண்டபத்தில் ஐந்து ஆண்டுகள் கந்தபுராண விரிவுரையையும் செய்து தமிழுடன் ஆன்மீகமும் வளர்த்தார்.

இது மட்டுமல்லாமல், 14 கட்டுரை நூல்கள், 3 வாழ்க்கை வரலாற்று நூல்கள் எழுதியுள்ளார். நான்கு நூல்களையும் பதிப்பித்தார். தமிழக வானொலி நிலையங்கள், இலக்கிய அமைப்புகளில் இவர் ஆற்றிய சொற்பொழிவு தொகுப்புகள் பல நூல்களாக வெளிவந்தன. ரா.பி சேதுபிள்ளையின்‘தமிழின்பம்’ என்ற நூலுக்கு பாரத அரசின் சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது.

செய்யுளுக்கு என்றே கருதப்பட்ட அடுக்குமொழி, எதுகை, மோனை, இலக்கியத் தொடர்’களை உரைநடையிலும் கொண்டுவந்தவர். சொல்லின் செல்வர் என்று புகழப்பட்டார். ‘செந்தமிழுக்குச் சேதுப்பிள்ளை’ என்று கவியோகி சுத்தானந்த பாரதியால் போற்றப்பட்டார். தமிழ் விருந்து, தமிழர் வீரம், ஆற்றங்கரையினிலே உள்ளிட்ட இவரது பல படைப்புகள் நாட்டுடைமை ஆக்கப்பட்டன.

ரா.பி.சேதுப்பிள்ளையின் பிறந்த தினம் இன்று