தடையை தகர்த்தெறியும் பாரதம்

தங்களின் நாட்டுக்குத் தேவைகள் அதிகம் உள்ளதால், ராணுவச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பாரதத்திற்கு கொரோனா தடுப்பூசிக்கு தேவைப்படும் மூலப்பொருட்களை தர இயலாது என அமெரிக்கா கை விரித்துவிட்டது.

இந்த நிலையில், நமது பாரத அரசு உடனடியாக செயல்பட்டு, அவசர நடவடிக்கையாக பல ஆயிரம் கோடி ரூபாய்களை இரண்டு தடுப்பூசி நிறுவனங்களுக்கும் மேலும் பல ஆய்வு நிறுவனங்களுக்கும் அளித்துள்ளதாக தெரிகிறது. இந்த மூலப்பொருட்களை மேற்கண்ட நிறுவனங்களுடன் இணைந்து ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனமான டி.ஆர்.டி.ஓ மற்றும் அறிவியல் தொழில் நுட்ப கவுன்சில் எனப்படும் சி.எஸ்.ஐ.ஆர் நிறுவனங்களும் கண்டுபிடித்து தயாரிக்கும் எனவும் சினர்ஜி என்ற அரசு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனமும் இதில் இணைந்துகொள்ளும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இது மிகவும் வரவேற்கத்தக்க நடவடிக்கை. ஏனெனில், நமக்கு ராக்கெட் என்ஜின்களைத் தர அமெரிக்கா தடை போட்ட பிறகு நமது இஸ்ரோ அதனை ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்தது. நமது அணு உலைகளை இயக்க தேவையான கனநீரினை தர மறுத்தபோது தமிழகத்தில் தூத்துக்குடியில் அதனை ஆராய்ச்சி செய்து நாம் கண்டுபிடித்தோம், கார்கில் போர் சமயத்தில் நமக்கு செயற்கைக்கோள் விவரங்களைத்தர அமெரிக்கா மறுத்ததால் அதனை நாம் சொந்தமாகவும் அதித் துல்லியமாகவும் உருவாக்கியுள்ளோம். தற்போது அதேபோல இதனையும் நமது பாரதம் சாதிக்கும் என்பது உறுதி.