எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகள் கைவிடப்படுகிறதா?

தமிழகத்தில் மொத்தம் 2,381 அரசு தொடக்கப்பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் 4 முதல் 6 வயது வரையிலான குழந்தைகளை பராமரிக்க அங்கன்வாடி மையங்களும் செயல்படுகின்றன. இங்கு குழந்தைகளுக்கு அடிப்படை கல்வி கற்பிக்கப்பட்டு வந்தன. இருந்தபோதிலும், தனியார் பள்ளிகளில் இருப்பதை போல இதற்கென எல்.கே.ஜி, யு.கே.ஜி போன்ற பிரத்யேக வகுப்புகள் இல்லாமல் இருந்தது. இதனால் தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகள் படிக்கும் குழந்தைகளை ஒப்பிடுகையில், அங்கன்வாடி குழந்தைகளின் கல்வித் திறன் குறைவாக இருந்தது. தனியார் பள்ளிகளில் நடத்தப்படுவதை போல அரசுப் பள்ளியிலும் ‘கிண்டர் கார்டன்’ வகுப்புகளை அரசு துவங்கி நடத்த வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, கடந்த 2018ல் அங்கன்வாடி மையங்கள் எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகளாக பரிசோதனை அடிப்படையில் நடத்தப்பட்டு வந்தன. இதற்கு நல்ல வரவேற்பு இருந்தது. கொரோனா ஊரடங்கு, பொருளாதார பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால் கடந்த கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகமாக இருந்தது. இதனால் எல்.கே.ஜி, யு.கே.ஜிக்கு நியமிக்கப்பட்டிருந்த ஆசிரியர்கள் 1 முதல் 5ம் வகுப்புகளுக்கு மாற்றப்பட்டனர். இதனால் அப்போதே அரசுப் பள்ளிகளில் கிண்டர் கார்டன் வகுப்புகள் நீக்கப்படும் என தகவல்கள் வெளியானது. இதற்கு பொதுமக்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அரசுப் பள்ளிகளில் கிண்டர் கார்டன் வகுப்புகள் தொடரும் என தமிழக அரசு அறிவித்தது. ஆனால், நடப்பு கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி, யு.கேஜி. வகுப்புகளை நடத்துவது தொடர்பாக எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளிடம் விசாரித்தபோது, இதுதொடர்பாக எந்த சுற்றறிக்கையும் வெளியிடப்படவில்லை என தெரிவித்தனர். மேலும், இந்த வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்ற அறிவிப்பும் வெறும் அறிவிப்பாகவே இருக்கிறது. இதுவரை கூடுதல் ஆசிரியர்கள் யாரும் கிண்டர் கார்டன் வகுப்புகளுக்கு நியமிக்கப்படவில்லை. இதனால், நடப்பாண்டில் அரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகள் தொடருமா என்ற சந்தேகம் மக்களிடம் வலுத்துள்ளது. அரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகளை நீக்கினால் மாணவர்களின் தொடக்கக்கல்வி திறன் பாதிக்கப்படும் என பெற்றோரும், கல்வியாளர்களும் கூறி வருகின்றனர்.