ஆளுநரிடம் அ.தி.மு.க மனு

தமிழகத்தில் தற்போது நடைபெறும் தி.மு.க தலைமையிலான ஆட்சியில் ஊழல், சட்டம் ஒழுங்கு பாதிப்பு உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியிடம் புகார் அளிக்க, எதிர்கட்சியான அ.தி.மு.க சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில் நேற்று சென்னையில் சின்னமலை பகுதியில் இருந்து ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி நடந்தது. அக்கட்சியினர், சைதாப்பேட்டை, சின்னமலை பகுதியில் இருந்து அடையாறு, சர்தார் படேல் சாலை, கிண்டி வழியாக ஊர்வலமாக ஆளுநர் மாளிகைக்கு சென்றனர். பேரணி முடிவில் பழனிசாமி மற்றும்  முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் ஆளுநரை சந்தித்து மனு அளித்தனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “திமுக அரசின் ஊழல் மற்றும் முறைகேடுகள் என்ற தலைப்பில் துறை ரீதியான ஊழல் குற்றச்சாட்டுகள், இரண்டு ஆண்டு கால தி.மு.க ஆட்சியில் நடைபெற்றுள்ள ஊழல் குறித்தும், சட்டம் ஒழுங்கு சீர்கேடு புகார்கள் குறித்தும் ஆளுநரிடம் புகார் மனு அளித்துள்ளோம். திராவிட மாடல் ஆட்சியில் பல்வேறு ஊழல்கள் கொடிகட்டி பறக்கின்றன. இது தொடர்பாக ஆளுநரிடம் ஆதாரத்துடன் கூறியுள்ளோம். தமிழகத்தில் அன்றாடம் நிகழும் நிகழ்வுகள் குறித்தும், மக்கள் படும் அவதிகள் குறித்தும் முழுமையாக ஆளுநரிடம் தெரிவித்தோம். புகாரை பரிசீலிப்பதாக ஆளுநர் கூறியுள்ளார். மணல் கொள்ளையர்கள், கிராம நிர்வாக அதிகாரியை படுகொலை செய்கின்றனர். அரசு ஊழியர்களுக்கு இந்த ஆட்சியில் பாதுகாப்பு இல்லை. கள்ளச் சாராய சாவு, போலி மதுபான சாவு நடந்துள்ளது. தஞ்சாவூரில் டாஸ்மாக் பாரில் காலை 11 மணிக்கு விற்கப்பட்ட மதுவை அருந்திய 2 பேர் மரணம் அடைந்துள்ளனர். பொம்மை முதல்வர், திறமையற்ற முதல்வர் ஸ்டாலின். வேங்கைவயல் சம்பவத்தில் இதுவரை குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியிவில்லை. இது தொடர்பாக நடவடிக்கையும் எடுக்கவில்லை. ரௌடிகளும், குற்றவாளிகளும் காவல் துறையை கண்டு பயப்படுவது இல்லை. எந்த நடவடிக்கையும் எடுக்காத அரசுதான் இந்த அரசு” என்று கூறினார்.