நார்கோ சோதனைக்குத் தயார்

தன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைக்கும் நார்கோ சோதனை அல்லது பாலிகிராபி உள்ளிட உண்மை கண்டறிதல் சோதனைக்கு தான் தயார் என இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சிங் தெரிவித்துள்ளார். பாரத மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பிரபல மல்யுத்த வீராங்கனைகளான வினேஷ் போகத், சாக்சி மாலிக் உள்ளிட்ட 7 பேர் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தினர். இது தொடர்பாக பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது கடந்த மாதம் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 23 முதல் மல்யுத்த வீராங்கனைகள் மற்றும் வீரர்கள் தொடர்ந்து தலைநகர் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பிரிஜ் பூஷன் தனது முகநூல் பதிவில், “பஜ்ரங் புனியா மற்றும் வினேஷ் போகத் ஆகியோர் இந்த சோதனைக்கு தயார் என்றால் நானும் சோதனைக்கு தயார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். அதை நான் உறுதியாக சொல்கிறேன். தற்போது போராடிக் கொண்டிருப்பவர்களை தவிர யாரை வேண்டுமானாலும் கேட்டுப் பாருங்கள் நான் தவறாக நடந்து கொண்டேன் என சொல்லவே மாட்டார்கள். எனது 11 ஆண்டுகால வாழ்வை நம் தேசத்தின் மல்யுத்தத்திற்காக கொடுத்துள்ளேன்” என அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் பிரிஜ் பூஷனின் உண்மை கண்டறியும் சோதனை சவாலை மல்யுத்த வீரர் வீராங்கனைகள் ஏற்றுக் கொண்டனர். அவர் 2 பேரை மட்டும்தான் சோதனைக்கு அழைக்கிறார். ஆனால் நாங்கள் ஏழு பேரும் இந்த சோதனைக்கு தயாராக இருக்கிறோம் என வினேஷ் போகத் கூறியுள்ளார்.