பெண்மையைப் போற்றுவதே பெருமை

ஒவ்வொரு வருடமும் நாம் பெண்கள் தினத்தைக் கொண்டாடுகிறோம். ஆனால், இந்த நாளில் என்ன சாதிக்கிறோம்?

பெண்மைக்கு என்ன பெருமை சேர்க்கிறோம்?
எத்தனையோ தடைகளைத் தாண்டி வந்த பெண்மைக்கு என்ன மதிப்புத் தருகிறோம்?
இன்றும் செய்தித் தாள்களைப் புரட்டினால் ஆங்காங்கே பெண்கள் கற்பழிக்கப்பட்ட செய்திகள்… கணவனால் கொடுமைப் படுத்தப்பட்ட பெண்கள்… வரதட்சணைக் கொடுமைக்காக எரிக்கப்பட்ட பெண்கள்…தந்தையே தன் மகளைக் கற்பழிக்க முயன்ற கயமைத் தனம், கல்வி கற்பிக்கும் ஆசானே மாணவியைக் கற்பழித்தல் இப்படி எத்தனை எத்தனை செய்திகள்.

ஆசானுக்கே அரிச்சுவடியில் சந்தேகம் வரலாமா?
இன்னமும் அறியாமையிலும் அவலத்திலும் அடிபட்டு, மிதிபட்டு அரைப் பைத்திய நிலையில் அவதியுறும் பெண்கள். இந்தக் குடும்ப வன்முறை பற்றிய ஒரு கட்டுரையை ‘இந்து’ நாளிதழில் படித்தேன். நம் பாரதத்தின் கிராமங்களில்கூட அறிவி யல் வளர்ச்சி வந்துவிட்டது. பெண்கள் கல்வி கற்கக் கிராமப் புறங்களிலிருந்து நகர்ப் புறங்களுக்கு வருகிறார்கள். கிராமம் – நகரம் என்ற நிலை மாறி, அனைவரும் நாகரிக வாழ்வைத் தேடி அலைகிறார்கள். தொழில்நுட்ப நிலையிலும் பல கிராமப் பெண்கள் சாதனை புரிந்துள்ளார்கள்.

பெண்மையைப் போற்றுவதே பெருமை!
வாட்ச்மேன் மகள் சப்கலெக்டர் ஆகிறாள். ஏழ்மை நிலையிலும் படிக்கும் ஆர்வத்தால் தொழிற்கல்வி பயின்று கல்லுரியில் முதலாவதாக வந்து தங்கப் பதக்கம் பெறுகிறாள் ஒரு மாணவி. ஆனால், கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு வரும் பெண்களின் மனநிலை என்ன என்பதை அந்தக் கட்டுரை விளக்குகிறது.
தகப்பனால் அடி உதை வாங்கி அரைப் பைத்திய நிலையில் இருக்கும் தாய், எப்போதும் வறுமை, எதிர்காலம் பற்றிய அச்சம், தன் கற்புக்கு உத்தரவாதம் அற்ற நிலை, சமூகத்தின் பாலியல் பலாத்காரக் கொடுமை.
இவற்றைக் களைய குடும்ப வன்முறைச் சட்டங்கள் எப்படி உதவுகின்றன? தனி நீதிமன்றங்கள், உதவும் அமைப்புகள் அத்த னையும் இருக்கின்றன. இத்தனை இருந்தும் எப்படி இத்தனை அக்கரமங்கள் நிகழ்கின்றன? ஒரு பீட்சாவுக்கு ஆர்டர் கொடுத்தால் அரை மணியில் நம் இல்லம் தேடி வந்துவிடுகிறது.அவதியுறும் பெண்மைக்குப் பாதுகாப்பு தர அரை மணி நேரம் போதாதா? என்று வினா எழுப்புகிறார் கட்டுரையாளர். அரசாங்கம் இதற்குத் தனி ஏற்பாடு செய்ய வேண்டும். அவசரகால உதவியாக ஏதாவது ஒரு ஏஜன்ஸியை ஏற்படுத்த வேண்டும் என்கிறார் அவர்.

ராமா, யாரை அழைப்பேன்?
ஒரு தவளையை ராம பிரானின் வில் அழுத்திக் கொண்டிருந்ததாம். அதை உணர்ந்த ராமர் தன் வில்லை விலக்கிக்கொண்டு தவளையைப் பார்த்துக் கேட்டாராம் ‘ஏன் முன்பே நீ என்னிடம் முறையிடவில்லை’ என்று, தவளை பதில் சொல்லியதாம்…
“எனக்கு யாராவது துன்பம் தந்தால் ‘ராமா’ என அழைப்பேன். ஆனால், அந்த ராமனாலேயே எனக்குத் துன்பம் ஏற்பட்டால் யாரை அழைப்பேன்.”
பல தகுதிகள் இருந்தும் திறமை இருந்தும் தன் திறமைகளைப் பெண்களால் முழுமையாக வெளிக்காட்ட முடியாமல் போவதின் காரணம் அவர்கள் குடும்பச் சூழ்நிலைகளே! குடும்ப வன்முறையால் பெண் இனம் அழிந்துகொண்டிருக்கிறது. வறுமையும் விரக்தியும் அச்சமும் ஆட்க் கொண்ட நிலையில் அவர்களால் இலக்கை அடைய முடிவதில்லை. தவிர, தற்கால நவநாகரிகப் பெண்களின் போக்கும் போலி விளம்பரங்களின் ஆதிக்கங்களும் திசைமாறச் செய்கின்றன.
சிகப்பு தான் அழகு எனக் கூறும் விளம்பரங்கள், முகச் சுருக்கம் இல்லாமல் இருக்க செய்து கொள்ளப்படும் ‘பொட்டக்ஸ்’ சிகிச்சை பற்றிய அறிவிப்புகள், அரைகுறை ஆடைகளும் குட்டைப் பாவாடைகளும் இதுதான் நாகரிகம் எனப் பறைசாற்றும் விளம்பரங்களும், இவை எல்லாமே பெண்மையைப் பெருமை படுத்தவில்லை.
காதலர் தினத்தன்று பப்புக்குப்போய் பெண்கள் பீர் அருந்துவது நாகரிகமல்ல. சரிநிகர் சமானம் என்பது இதுவல்ல என்பதைப் பெண்களும் உணரவேண்டும். கணினியைத் திறந்தால் அது நம்மை ‘டேட்டிங்’கிற்கு அழைக்கிறது. தனிமையாக இருப்பவர்களை ஜோடி சேர்க்கிறது. நல்ல விஷயங்கள் எத்தனையோ கணினியில் இருக்க நாம் தேர்ந்ததெடுப்பது இதைத்தான். ‘பேஸ் புக்’கில் ஆரம்பிக்கும் நட்பு கடைசியில் தற்கொலைக்கு வித்திடுகிறது. இது அறிவியல் வளர்ச்சி அல்ல; அறியாமையின் தளர்ச்சி. சமீபத்தில் ஒரு ‘டாக் ஷோ’ வில். ‘டிக் டாக்’ மூலம் அறிமுகமான பெண், தான் சீரழிந்த கதையைக் கண்ணீருடன் சொல்கிறார்.
இணைய தளம் அறிவு விருத்திக்கு ஆனால், அழிவு விருத்திக்கு வழிகாட்டுகிறது. அந்த நிகழ்ச்சி அமைப்பாளர் எத்தனை டைவர்ஸுக்கு வழி சொல்வார்? எத்தனை முறையற்ற உறவுகளை இணைப்பார்? கஷ்டம்.
‘பொறுப்புத் துறப்பு’ என்கிற அறிவிப்பின் மூலம் சேனல்கள் தப்பிவிடுகின்றன. பாதிக்கப்பட்டவர்கள் அப்பாவிகள். நடனப் போட்டி என்னும் பெயரில் முன்பின் அறிமுகம் இல்லா சிறுமிகள் சிறுவர்களுடன் ஆடவைக்கப்படுகின்றனர். பெற்றோர்களும் அதைப் பார்த்து ஆனத்தக் கண்ணீர் வடிக்கின்றனர். ஒரு குழந்தையின் ‘ரோல்மாடல்’ தாய்தான். அதனால்தான் சொன்னார்கள் ”தாயைப்போல் பிள்ளை நூலைப் போல் சேலை” என்று.
ஓர் ஆண் கல்வி கற்றால் அவன் மட்டும் தான் உயருவான். ஆனால், ஒரு பெண் கல்வி அறிவு பெறும்போது அந்தக் குடும்பமே உயர்கிறது. அதுதான், பெண்ணின் பெருமை, தாயின் தனிச் சிறப்பு. இன்று அந்தத் தாய் நோயாலே நலம் கெட்டு தன் சேயாலேயே சீரழிகிறாள். பெண்ணின் பெருமைக்குத் தாய்மை ஒரு அடையாளம். அவள் நதி போன்றவள். ஓடினால் நதி, வீழ்ந்தால் அருவி, நின்றால் ஏரி, கடந்தால் கடல். தாய் என்பவள் ஒரு சகாப்தம். அவள் ஒரு சரித்திரம்.

சரித்திரம் கண்டிப்பாக ஒரு நாள் திரும்பும்
தாய் பொறுமையின் சின்னம். அதனால் தான் அவளைப் பூமாதேவிக்கு உதாரணமாகச் சொன்னார்கள். தாயிற் சிறந்ததொரு கோயில் இல்லை. கடவுளை வணங்க கோயிலைத் தேடவேண்டாம், தாயை வணங்கினால் போதும். குறிஞ்சியிலே வாலைக் குமரியாய் உதித்து, முல்லையில் மலர்ந்து, பாலையிலும் பூத்த மலர் அவள். பஞ்சபூதங்களும் அவளுள் அடக்கம். மண்ணும் அவளே! விண்ணும் அவளே! கருணையின் வடிவம், அன்பின் மறு உருவம், தியாகத்தின் பிரதிபிம்பம், காற்றாகி, கனலாகி கடலானவள், நேற்றாகி இன்றாகி நாளையானவள். அவள்தான் மாதா பராசக்தி. அவள்தான் தாய். அந்தக் காலப் பள்ளிகளில் நீதிபோதனை என்றொரு வகுப்பு உண்டு. நல்ல நல்ல கருத்துகளைக் கூறும் வகுப்பு அது. இப்போது கூறுவதற்கும் ஆள் இல்லை; கேட்கவும் காதுகள் இல்லை. குறிப்பாக, இளைய சமுதாயம் பாரதியின் பாஞ்சாலி சபதத்தில் வருவது போல்
ஆடை குலைவுற்று நின்றாள்.
ஆவெனத் துடித்தழுதாள் வெறும்
மாடு நிகர்த்த துச்சாதனன்
மைக்குழல் பற்றி இழுத்தான்
என்பதுபோல் இப்போது துச்சாதனர்கள் அதிகமாகிவிட்டனர். பெண் அடிமைக்கு எதிராக முப்பதுகளில் பாரதி குரல் கொடுத்தான். மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம் என்றான். நாம் அர்த்தம் புரிந்து கொள்ளாமல் பெண்களைக் கொளுத்திக் கொண்டிருக்கிறோம்.
பெண்ணின் பெருமை எல்லாம் மேடைப் பேச்சோடு சரி என்னும் நிலைக்கு வந்துவிட்டோம்! பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் எல்லாத் துறைகளிலும் பரவிக் கிடக்கின்றன. அவர்களின் வறுமை, இயலாமை, குடும்பச் சூழ்நிலை… இதை வைத்து அவர்கள் சூறையாடப் படுகிறார்கள்.
மனம் ஆரோக்கியமாக இருந்தால் செயலில் நேர்த்தி வரும். அந்த ஆரோக்கியம் சமுதாயத்திலும் எதிரொலிக்க வேண்டும். தனி மனித சுதந்திரம் சுற்றுப் புறத்தையும் செம்மைப்படுத்த வேண்டும். நினைவு நல்லது வேண்டும் என்று பாரதி கேட்டதும் இதைத்தான். இது பெண்கள் மட்டும் சம்பந்தப்பட்ட பிரச்சனை அல்ல. நாட்டுப் பிரச்சினை, சமுதாயப் பிரச்சினை. அதனால்தான் இவளுக்குச் சமுதாயப் பாதுகாப்பு தேவை, அரவணைப்புத் தேவை.சக நண்பர்களின் ஒத்துழைப்புத் தேவை.
சட்டத்தால் மட்டுமே இவளுக்குப் பாதுகாப்புக் கிடைக்காது. இது நாம் இழந்துவிட்ட மனிதாபிமானத்தின் பிரச்சினை.
நான் பாரதியன் எனப் பெருமைப்பட்டுக் கொள்ளும்போது, நான் நல்ல மனிதன் பாரத் மாதா கி ஜெய் எனத் தன் நாட்டைத் தாயாக வணங்குவதைப்போல் பெண்கள் அனைவரையும் (மனைவி நீங்கலாக) என் தாயாக, சகோதரியாக வணங்குவேன் என ஒவ்வோர் ஆணும் சபதம் எடுத்துக்கொண்டு அதன்படி நடந்து கொள்ள வேண்டும்.
அன்றுதான் உண்மையான பெண்கள் தினம் பெருமைக்குரிய தினம். பெண்கள் உலகின் கண்கள் என்பார்கள். அந்தக் கண்களில் காட்டிராக்ட் வந்திருக்கிறது. தக்க காலத்தில், உரிய நேரத்தில் மருத்துவம் பார்க்க வேண்டும். இல்லையெனில் குருட்டுப் பெண்ணின் வறட்டுப் பெருமையைத்தான் நாம் பேசிக் கொண்டிருப்போம்.
வாழ்க பெண்மை, வாழ்க பெண்கள் தினம்.