கடுமையான மதமாற்ற தடுப்புச் சட்டம் தேவை

விஷ்வ ஹிந்து பரிஷத் (வி.ஹெச்.பி) பொதுச்செயலாளர் மிலிந்த் பராண்டே, சத்தீஸ்கரில் கிறிஸ்தவ மிஷனரிகள் சட்டவிரோத மதமாற்றம் செய்யும் சம்பவங்கள் குறித்து தீவிர கவலையை வெளியிட்டுள்ளார். இதுபோன்ற மதமாற்ற நடவடிக்கைகளைத் தடுக்க கடுமையான சட்டம் இயற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். சட்ட விரோதமான மதமாற்றங்களுக்கு எதிராக கடுமையான சட்டங்களைக் கொண்டுள்ள மாநிலங்கள், அவற்றைக் கண்டிப்பாகப் பின்பற்றுவதால், நிலைமைகள் சற்று நிலையானதாக இருப்பதாக கூறியுள்ள அவர், “சத்தீஸ்கரில் நடந்த சம்பவங்கள், சட்டவிரோத மதமாற்றங்களைத் தடுக்க மாநிலத்தில் கடுமையான சட்டம் தேவை என்பதை மீண்டும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. சத்தீஸ்கர் மக்கள் இந்த தீய செயல்களை நிறுத்துவதில் உறுதியுடன் உழைத்துள்ளனர். விஷ்வ ஹிந்து பரிஷத் அவர்களுக்கு எப்போதும் ஆதரவாக நிற்கிறது. சட்டவிரோத மதமாற்றங்களைத் தடுப்பதற்கான அனைத்து முயற்சிகளும் அரசியலமைப்பு மற்றும் சட்டத்தின் வரம்பிற்குள் செய்யப்பட வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம். மாநிலத்தில் உள்ள கிறிஸ்தவ மிஷனரிகளின் மதமாற்றம் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான மனநிலையை சரியான நேரத்தில் கட்டுப்படுத்தியிருந்தால், நாராயண்பூரின் அப்பாவி பழங்குடி சமூகம் தெருவில் இறங்கி போராடியிருக்க வேண்டிய தேவையே இல்லை. பழங்குடியின சமூகத்தின் நலன்களைப் பாதுகாப்பது மாநில அரசின் தலையாய கடமை. அரசும் உள்ளாட்சி நிர்வாகமும் மாநிலத்தின் பழங்குடி சமூகத்துடன் உறுதியாக நிற்க வேண்டும். பழங்குடியின சமூகத்தின் பழக்கவழக்கங்கள், மரபுகள், நம்பிக்கைகள் மற்றும் தெய்வங்களை இழிவுபடுத்துவதும், கேலி செய்வதும், இந்த கிறிஸ்தவ மிஷனரிகளால் பழங்குடியினரின் இருப்பை அழிக்கும் கேவலமான முயற்சிகளை இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது. இந்த விவகாரத்தில் மாநில அரசு தீவிரமான மற்றும் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறினார்.