மதமாற்றத்திற்கு முற்றுப்புள்ளி

கர்நாடக மாநிலம் மங்களூருவில் ஒரு பெண்ணை மதமாற்றம் செய்ய முயன்ற விவகாரத்தில் அந்த குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் இறந்ததற்கு வருத்தம் தெரிவித்த பெஜாவர் மடத் தலைவர் ஸ்ரீ விஸ்வபிரசன்ன தீர்த்த சுவாமிகள், ‘வற்புறுத்தல், மூளைச்சலவை, ஆசைகாட்டுதல், தூண்டுதல்கள் மூலம் மக்களை மதம் மாற்ற முயற்சிப்பது குடும்பத்திலும் சமூகத்திலும் பெரிய முரண்பாடுகளை ஏற்படுத்தும். கட்டாய மதமாற்றத்தை தடுக்க, அரசு மத மாற்றத் தடுப்புச் சட்டத்தை அரசு இயற்ற வேண்டும்’ என பேசினார். மேலும், பள்ளிகளில் மாணவர்களுக்கு முட்டை வழங்கும் மாநில அரசின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்த சுவாமிஜி, ‘குழந்தைகளின் உணவுப் பழக்கத்தை கட்டாயப்படுத்த அரசு முயற்சிக்கக் கூடாது. பள்ளிகள் என்பது கல்வியை வழங்குவதற்காகவே தவிர, குழந்தைகளின் உணவுப் பழக்கத்தை மாற்றுவதற்காக அல்ல. குழந்தைகளுக்கு முட்டை வழங்க அரசு விரும்பினால், அதை உட்கொள்பவர்களுக்கு அதற்கு ஈடான பணத்தை வழங்கலாம். பள்ளிகளில் முட்டை வினியோகம் செய்வதை அரசு நிறுத்த வேண்டும்’ என்று கூறினார்.