கீதா பிரசுரம் மூடப்படுகிறதா?

உத்திரபிரதேசத்தின் கோரக்பூர் மாவட்டத்தில் 1923ம் ஆண்டில் ஹனுமான் பிரசாத் போத்தர் என்பவர் கீதா பதிப்பகத்தை நிறுவினார். இது பகவத்கீதை மட்டுமல்லாமல் பல்வேறு ஹிந்து மத நூல்களை வெளியிடுகிறது. மிகக் குறைந்த விலையில் விற்பனை செய்கிறது.

சமூக ஊடகங்களில் நஷ்டம் காரணமாக கீதா பிரஸ் மூடப்படவிருப்பதாக செய்திகள் கடந்த சில வருடங்களாக உலா வருகின்றன. இது குறித்து அதன் மேலாளரான லால்மணி திவாரி கூறுகையில், கீதா பிரசுரம் மக்கள் ஆதரவாலும் இறையருளாலும் நன்றாக நடக்கிறது. 2 லட்சம் சதுர அடியில் நவீன ஜப்பான், ஜெர்மனி, இத்தாலி நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அச்சு இயந்திரங்களைப் பயன்படுத்தி பதிப்பித்தல் நடக்கிறது. எங்களுக்கு யாராவது நன்கொடை அனுப்பினால், அவர்களுக்கு நாங்கள் நன்றியுடன் பாராட்டுக் கடிதத்தை அனுப்புவதுடன் அவர்களின் காசோலையையும் திருப்பி அனுப்புகிறோம். நன்கொடையை நாங்கள் வாங்குவதில்லை. எங்கள் புத்தகங்கள் மூலம் சமூகத்திற்கு சேவை செய்யவே நாங்கள் விரும்புகிறோம். மேலும், இதுபோல யாராவது உங்களுக்கு செய்தி அனுப்பினால் எச்சரிக்கையுடன் இருக்கவும். இதனை சாக்காகக் கொண்டு மோசடியில் சிலர் ஈடுபட வாய்ப்புள்ளது’ என்றார்.