இரண்டாம் ஆண்டில் விஜயபாரதம் மின்னிதழ்

விஜயபாரதம் மின்னிதழ் வாசகர்களுக்கு அன்பு வணக்கம்,

விஜயபாரதம் மின்னிதழ் தன் முதலாண்டு பயணத்தை முடித்து, இன்று வெற்றிகரமாக தனது இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. கொரோனா பொதுமுடக்கம் காரணமாக, வாரம்தோறும் உங்கள் இல்லம் தேடி வந்து கொண்டிருந்த நமது விஜயபாரதம் வார இதழை வெளியிடமுடியாத சூழல் நிலவியது. அப்போது, உங்கள் அனைவரையும் சந்திக்க வேண்டி ஒரு தற்காலிக ஏற்பாடாகவே விஜயபாரதம் மின்னிதழ் துவக்கப்பட்டது.

உங்களின் அபரிமிதமான அன்பாலும் ஒத்துழைப்பாலும் எதிர்பார்த்ததைவிட மிக அதிகமான மக்களிடம் நமது விஜயபாரதம் மின்னிதழ் சென்று சேர்ந்தது. வாசகர்கள் அனைவரிடமும் இந்த முயற்சிக்கு பெரிய வரவேற்பு இருந்தது. இதனால், சற்றே இயல்பு நிலை திரும்பி பத்திரிகை அலுவலகங்கள் செயல்பட துவங்கியபோதும் மின்னிதழை நிறுத்தாமல் தொடர்ந்து செய்திகளை வழங்கிட முடிவு செய்யப்பட்டு இன்றுவரை உங்கள் ஒத்துழைப்பால் வெற்றிகரமாக வெளியாகிக்கொண்டுள்ளது.

நமது மின்னிதழில் வெளியாகும் செய்திகளில், அரிதான ஒரு சில கட்டுரைகளைத் தவிர பெரும்பாலான செய்திகள் சுருக்கமாக, எளிதில் படிக்கும் வகையில் இருப்பது ஒரு சிறப்பு என்றால் இதில், வெளியாகும் பல செய்திகளும், தமிழகத்தில் உள்ள பெரும்பாலான சார்பு ஊடகங்களால் மறைக்கப்பட்ட, மறுக்கப்பட்ட, மறக்கப்பட்ட, மாற்றப்பட்ட செய்திகள் என்பது மற்றோர் சிறப்பு.

விஜயபாரதம் மின்னிதழை ஆரம்பித்ததில் இருந்து இந்த ஒரு வருடத்தில் பல்வேறு மாற்றங்களை நம் மின்னிதழ் சந்தித்துள்ளது. உதாரணமாக பத்திரிகை வடிவில் வெளிவந்த நம் மின்னிதழ், உங்களது ஆலோசனையின்படி உங்கள் வசதிக்காக வாட்ஸப்பில் படிக்க ஏதுவாக நீளவாக்கில் வடிவம் மாற்றப்பட்டது. செய்திகளின் எண்ணிக்கை, கார்ட்டூன்கள் என அவ்வப்போது சில மாற்றங்களை சந்தித்தாலும் நம்மால் மறக்க முடியாத ஒன்று, நம் விஜயபாரதத்தின் ஆசிரியர் ம. வீரபாகு அவர்களின் மறைவு. இது நமக்கெல்லாம் ஈடு செய்யமுடியாத ஒரு பேரிழப்பு.

தற்போது, நம் மின்னிதழ் சுமார் மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களை வாட்ஸப், முகநூல், டிவிட்டர் போன்ற சமூக ஊடகங்கள் வாயிலாக சென்றடைகிறது என்று செய்திகள் வருகின்றன. இது விஜயபாரதம் மின்னிதழின் வெற்றியல்ல, இது முழுக்க முழுக்க உங்களது ஈடுபாட்டால், பங்களிப்பால், பகிர்வுகளால், தொடர்ந்து நீங்கள் அளித்து வரும் ஆதரவால் மட்டுமே சாத்தியமான ஒரு வெற்றி.

விஜயபாரதம் மின்னிதழில் வெளிவரும் செய்திகள், கதைகள், வரலாற்றுத் தகவல்களை பலரும் மற்றவர்களுக்கு பகிர்வது மட்டுமின்றி, தங்கள் வாட்ஸப்பில் ஸ்டேட்டஸாக வைப்பது, செய்திகள் குறித்து விவாதிப்பது, குழந்தைகளுக்கு அந்த கதைகளையும், வரலாற்று நிகழ்வுகளையும் எடுத்துக் கூறுவது போன்ற செயல்கள் நம் மின்னிதழை மேலும் செம்மையாக்க நமக்கு ஊக்கத்தையும் உற்சாகத்தையும் தருகின்றன.

நம் விஜயபாரதம் மின்னிதழ், மேலும் பல லட்சம் பேரை சென்றடைய வேண்டும். அதனால், சமூகத்தில் நல்ல பல மாற்றங்கள் நிகழ வேண்டும். தேசம் பொலிவு பெற வேண்டும் என்பதே நம் விஜயபாரதம் குழுவின் எண்ணம்.

உலகின் குருவாய் பாரதம் மலர்ந்திட, தமிழகம் தன் பொலிவைப் பெற்றிட, அணிலாக நாம் அனைவரும் ஒன்றிணைந்து நம் பங்கை செம்மையாக செய்திடுவோம். உயர் லட்சியத்தை எய்திடுவோம்.

ஆசிரியர் குழு