ஹிந்து கோவில்களை நிர்வகிக்க தனி வாரியம் வேண்டும் – எச்.ராஜா

‘தமிழகத்தில், ஹிந்து கோவிலுக்கென்று, தனி வாரியம் அமைத்து, நிர்வகிக்க வேண்டும்’ என, பா.ஜ., தேசிய செயலர் எச்.ராஜா வலியுறுத்தி உள்ளார்.அவர் தன், ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியிருப்ப தாவது: மன்னர்கள், நம் முன்னோர்கள் பாதுகாத்த, தமிழகத்தில் உள்ள கோவில்கள், அதன் சொத்துக்களை எல்லாம் நாசமாக்கியது, தி.க., – தி.மு.க., கும்பல்தான். தமிழகத்தில் ஹிந்து கோவிலுக்கென்று, தனி வாரியம் அமைத்து நிர்வகிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

மேலும், அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில், 44 ஆயிரம் கோவில்கள், அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளன. இக்கோவில்களுக்கு, 4.78 லட்சம் ஏக்கர், நஞ்சை, புஞ்சை, மானாவாரி நிலங்கள், 22 ஆயிரத்து, 600 கட்டடங்கள், 33 ஆயிரத்து, 600 மனைகள் உள்ளன. இவை அனைத்தும், திராவிட கட்சிகளின் குண்டர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு, அவர்கள் கையில் உள்ளன.பல கோவில்கள், கடைகளாக மாற்றப்பட்டுள்ளன. இத்தகைய சீரழிவிற்கு தலைமை தாங்கிய, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், பாரம்பரியத்தை காப்பாற்றப் போகிறாராம்.

தி.மு.க., ஹிந்து மத விரோதி. ‘தில்லை நடராஜரையும், திருவரங்க நாதனையும், பீரங்கி வைத்து பிளக்கும் நாள் பொன்னாள்’ எனப் பேசிய, ஹிந்து விரோத, தமிழக கலாச்சார பாரம்பரியத்தின் எதிரியான தி.மு.க., – நம் கோவிலை காப்பாற்றுமா?’அடியே மீனாட்சி, உனக்கெதுக்குடி வைர மூக்குத்தி, கழற்றுடி கல்’ என, அண்ணாதுரை பேசியதை, ஹிந்துக்கள் மறக்க மாட்டார்கள் என்பதை, ஸ்டாலினுக்கு நினைவுப்படுத்துகிறேன்.நீங்கள் ஹிந்து கலாச்சாரத்தை, கலாச்சார மையங்களை, கோவில்களை அழித்தவர்கள்.அதனால் தான், எம்.ஜி. ஆர்., முதல்வராக இருந்தபோது, குன்றக்குடி அடிகளார் தலைமையில், ஒரு கமிட்டி அமைத்தார்.அதில் சட்ட வல்லுனர்கள், முன்னாள் நீதிபதிகள் உறுப்பினர்களாக இருந்தனர்.

அதன் பரிந்துரையின்படி, ஹிந்து கோவில் நிர்வாகம், ஹிந்து சான்றோர், ஆன்றோர் அடங்கிய, தனித்து இயங்கும் வாரியத்திடம் வழங்க வேண்டும். அப்படித்தானே வக்பு வாரியம் உள்ளது.மத சார்பற்ற அரசுக்கு, மத வழிபாட்டில் என்ன வேலை. அவர்களை தோலுரித்து காட்டுவோம். ஹிந்து கோவில்களை பாதுகாக்க, கோவில் நிலங்களை மீட்க, நாம் வீதிக்கு வர வேண்டிய நேரமிது.இவ்வாறு, எச்.ராஜா கூறியுள்ளார்.