ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி விழா தொடக்கம்

பூலோக வைகுண்டம் என்றழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நடைபெறும் திருவிழாக்களில் முதன்மையான விழாவான வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு வரும் ஜனவரி 6ஆம் தேதி நடைபெறுகிறது.

மார்கழி மாதத்தில், பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் அருளிய திருப்பாவையையும், மாணிக்க வாசகர் அருளிய திருவெண்பாவையும் பாடி கன்னிப்பெண்கள் நோன்பு இருப்பது காலம் காலமாக நடைபெற்று வருகிறது. மேலும் பகவான் ஸ்ரீகிருஷ்ணருக்கு பிடித்தமான மாதமும் மார்கழி மாதம் தான். அதனால் தான் மாதங்களில் நான் மார்கழி என்று அருளியிருக்கிறார். இதன் காரணமாகவே, வைணவ பக்தர்கள் மட்டுமல்லாமல், இந்துக்கள் அனைவரும் போற்றி வணங்கும் மிகப் புனிதமான மாதமாக மார்கழி மாதம் உள்ளது. இந்த மாதத்தில் வைகுண்ட ஏகாதசி திருநாளும், சிவ பக்தர்களுக்கு உகந்த நாளான திருவாதிரை திருநாளும் வருகிறது.

வைணவ பக்தர்களின் திருவிழாக்களிலேயே மிகப்பெரிய திருவிழாவாக வைகுண்ட ஏகாதசி திருவிழா அனைத்து வைணவ ஆலயங்களில், ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்விழாவானது மார்கழி மாதத்தில் 21 நாள்கள் கொண்டாடப்படுவது வழக்கம். முதல் பத்து நாள்கள் பகல் பத்து எனவும், வைகுண்ட ஏகாதசி திருநாள் முடிந்த பின்பு 10 நாள்கள் இராப்பத்து எனவும் கொண்டாடப்படுவது மரபு. அதிலும் பூலோக சொர்க்கம் என்றும், 108 வைணவ ஆலயங்களில் முதன்மையானதாகவும், பெரிய கோயில் என்றும் வைணவ பக்தர்களால் பயபக்தியுடன் போற்றப்படும் ஸ்ரீரங்கம் கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும்.

நடைபெறும் அனைத்து திருவிழாக்களும் புகழ்பெற்றவையாக இருந்தாலும், வைகுண்ட ஏகாதசி திருவிழாவிற்காகவே உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து வைகுண்ட வாசனாகிய ஸ்ரீரங்கநாதரை தரிசித்துச் செல்வது வழக்கம்.