விஸ்வேஸ்வர தீர்த்த சுவாமிகள் முக்தியடைந்தார்

கர்நாடகாவின், உடுப்பி பெஜாவர் மடாதிபதி விஸ்வேஸ்வர தீர்த்த சுவாமிகள், 89, முக்தியடைந்தார்.

உடுப்பி பெஜாவர் மடாதிபதி விஸ்வேஸ்வர தீர்த்த சுவாமிகள், சுவாச கோளாறால் பாதிக்கப்பட்டு, மணிப்பால் கிம்ஸ் மருத்துவமனையில், டிச., 20ல் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு செயற்கை சுவாச குழாய் பொருத்தி, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரின் விருப்பப்படி, உடுப்பி பெஜாவர் மடத்துக்கு, நேற்று காலை அழைத்து செல்லப்பட்டார். காலை, 9:30 மணிக்கு முக்தியடைந்தார்.

பெங்களூரு ஹனுமந்த நகரிலுள்ள, பூர்ணபிரக்ஞா வித்யாபீடத்தில், அவரின் பிருந்தாவன் அமைக்கப்பட்டது.மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், சதானந்த கவுடா, முதல்வர் எடியூரப்பா, வெவ்வேறு மடாதிபதிகள், அமைச்சர்கள், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள், பெருமளவிலான பக்தர்கள் பங்கேற்றனர்.சுவாமிகளின் இயற்பெயர் வெங்கடரமணா. தன், 8வது வயதில், சன்னியாச தீக் ஷை பெற்று, விஸ்வேஸ்வர தீர்த்தரானார். மடத்தின் மடாதிபதியாக பொறுப்பேற்று, பல சமூக நலப் பணிகளை மேற்கொண்டார். பசுக்கள் பாதுகாப்பில் ஆர்வம் காட்டினார்.