விளையாட்டு துறை பணியை மட்டும் உதயநிதி பார்க்கட்டும்

‘ஜெய் ஸ்ரீராம்’ என்று இந்தியா — பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியில் இருந்த ரசிகர்கள் சொன்னது தவறானது, வெறுப்பானது என்றெல்லாம் அமைச்சர் உதயநிதி கூறியிருக்கிறார். ஜெய் ஸ்ரீராம் என்பது இந்தியர்களின் நாடி நரம்புகளில் உள்ள மந்திரம் என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும்.

பாகிஸ்தான் உள்ளிட்ட சில நாடுகளுக்கு செல்லும்போது, அந்த நாட்டு விளையாட்டு ரசிகர்கள், இந்திய விளையாட்டு வீரர்களை மோசமாக நடத்தி உள்ளனர். பாகிஸ்தானில் இந்திய வீரர்களை கல்லால் அடித்துள்ளனர். இப்படி நடந்தபோதெல்லாம் உதயநிதி எங்கிருந்தார்?
தங்களுக்கு எது உற்சாகத்தை கொடுக்குமோ; அந்த கோஷங்களை எழுப்பி, தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது ரசிகர்களின் உரிமை. அதில் தலையிட உதயநிதிக்கு யார் அனுமதி கொடுத்தது?

கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை முஸ்லிம் கைதிகள் என்று மத ரீதியாக அடையாளப்படுத்தி பேசுபவர்கள், தங்களின் அணி வெற்றி பெற்றதை கொண்டாட, தங்களின் கடவுளை ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று போற்றி பாடுவதை கண்டிப்பதற்கு தகுதியில்லை. விளையாட்டுத் துறை அமைச்சர், தன்னுடைய துறை பணியை மட்டும் பார்த்தால் நல்லது        .நாராயணன் திருப்பதி, துணைத் தலைவர், தமிழக பா.ஜ.,