வருகிறது ‘பாரத் ஜிபிடி’: ‘ஹனூமான்’ எனும் ஏ.ஐ மாடலை அறிமுகம் செய்கிறார் முகேஷ் அம்பானி

‘சாட் ஜிபிடி’, கூகுளின் ஜெமினி போன்றவற்றுக்கு போட்டியாக ஹனூமான் என்ற ‘ஏ.ஐ’ மாடலை முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் உருவாக்கி வருகிறது. இதனை மார்ச் மாதத்தில் வெளியிட உள்ளனர். இந்த நூற்றாண்டில் விஸ்வரூப வளர்ச்சியை எட்டிவருகிறது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம். இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஓப்பன் ஏஐ (OpenAI) நிறுவனத்தின் சாட்ஜிபிடி (ChatGPT) என்ற சாட்பாட் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த சாட்பாட் (chat bot) இதுவரையில் செயற்கை நுண்ணறிவு எட்டாத உயரத்துக்கு அதை கொண்டு சேர்த்தது என்றே சொல்ல வேண்டும். கணினி, அறிவியல், கணிதம், கலை சார்ந்த எந்த கேள்வியை கேட்டாலும், அதி நுணுக்கமான பதில்களை அதுகொடுக்கிறது.

அதேபோல், கூகுள் நிறுவனம் ஜெமினி என்ற பெயரிலும், மைக்ரோசாப்ட் நிறுவனம் பின்ங் ஏஐ என்ற பெயரிலும் அறிமுகம் செய்தது. அந்த வரிசையில் தற்போது இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் பாரத் ஜிபிடி (BharatGPT) என்னும் பெயரில் இந்திய மக்களிடம் கொண்டு சேர்க்க திட்டமிட்டுள்ளது. இதற்காக ஐஐடி பாம்பே உடன் கைக்கோர்த்துள்ள ரிலையன்ஸ் நிறுவனம், இதற்காக ‘ஹனூமான்’ என்ற மாடலை புகுத்தியுள்ளது. 11 இந்திய மொழிகள் அடங்கிய ஹனூமான் மாடலை மார்ச் மாதத்தில் வெளியிட அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.