முப்படைகள் அரசியலுக்கு அப்பாற்பட்டவை

முப்படைகளும் அரசியலுக்கு அப்பாற்பட்டவை எனவும், அரசின் வழிகாட்டுதல்படி தான் செயல்படுவோம் என முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் கூறியுள்ளார். முப்படைகளின் தலைமை தளபதியாக நியமிக்கப்பட்ட பிபின் ராவத் இன்று (ஜன.,1) பொறுப்பேற்று கொண்டார். முன்னதாக அவர். டில்லியில் உள்ள தேசிய போர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். அப்போது, ராணுவ தளபதி நரவானே, விமானப்படை தளபதி பதூரியா, கடற்படை தளபதி கரம்பிர் சிங் மற்றும் உயரதிகாரிகள் உடனிருந்தனர்.

பின்னர் பிபின் ராவத் கூறுகையில், முப்படைகளும் அரசியலுக்கு அப்பாற்பட்டு இருக்கும். அரசியல் எங்களுக்கு வேண்டாம். அரசின் வழிகாட்டுதல்படி மட்டுமே செயல்படுவோம். முப்படைகளையும் ஒருங்கிணைத்து ஒரே அணியாக செயல்பட தலைமை தளபதியாக கவனம் செலுத்துவேன். முப்படைகளுக்கு ஒதுக்கப்படும் நிதியை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த முயற்சி செய்வேன். இவ்வாறு அவர் கூறினார்.