முதல் புல்லட் ரயில் நிலையம் வீடியோ வெளியிட்ட அமைச்சர்

குஜராத் மாநிலம் ஆமதாபாதில் மிக பிரமாண்டமாகவும், அதிநவீன கலைநயத்துடனும் கட்டப்பட்டுள்ள, நாட்டின் முதல் புல்லட் ரயில் நிலையத்தின் உட்புற மற்றும் வெளிப்புறத் தோற்றத்தின் வீடியோவை, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டுள்ளார். மஹாராஷ்டிராவின் மும்பை – குஜராத்தின் ஆமதாபாத் வரை புல்லட் ரயில் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. புல்லட் ரயில், மணிக்கு 350 கி.மீ., வேகத்தில் செல்லும் வகையில் தண்டவாளம் அமைக்கப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் மொத்த மதிப்பு, 1.08 லட்சம் கோடி ரூபாய். இதில், 81 சதவீதத்தை, 0.1 சதவீத வட்டியில், 50 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்தும் வகையில், கிழக்காசிய நாடான ஜப்பான் நிதிஉதவி வழங்கியுள்ளது. வரும் 2026-ல் முதற்கட்ட பணிகள் நிறைவடையும் என்றும், 2028-ல் அனைத்துப் பணிகளும் முழுமையாக நிறைவடையும் எனவும், எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் குஜராத்தின் ஆமதாபாதில், சபர்மதி போக்குவரத்து மையத்தில் கட்டப்பட்டு உள்ள, நாட்டின் முதல் புல்லட் ரயில் நிலையத்தின் உட்புற மற்றும் வெளிப்புறத் தோற்றத்தின் வீடியோவை, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ‘எக்ஸ்’ சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

மிக பிரமாண்டமாக அதி நவீன கட்டுமான கலை அம்சங்களுடன் கட்டப்பட்டுள்ள இந்த ரயில் நிலையம், நாட்டின் கலாசார பாரம்பரியமாக திகழும் வகையில் அமைந்துள்ளது. கட்டுமானத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள அலங்கார பொருட்கள், பழமையையும், புதுமையையும் இணைத்து பிரதிபலிக்கும் வகையில் உள்ளன. மேலும், பயணியருக்கு ஏற்ற வகையில் ரயில் நிலையத்தில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.