முதல்முறையாக ரயில் தாமதத்துக்கு பயணிகளுக்கு இழப்பீடு

புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில் 2 மணிநேரம் தாமதமாக வந்ததற்காக அதில் முன்பதிவு செய்து பயணம் செய்ய காத்திருந்த பயணிகள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.250 இழப்பீடாக வழங்கப்பட்டது. நாட்டிலேயே முதல்முறையாக ரயில் தாமதமாக வந்ததற்காக பயணிகளுக்கு இழப்பீடு இப்போதுதான் வழங்கப்பட்டுள்ளது.

தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயிலைப் பொருத்தமட்டில், ரயில் ஒருமணிநேரம் தாமதமாக வந்தால் பயணிகளுக்கு 125 ரூபாயும், 2 மணி நேரத்துக்குமேல் தாமதமாக வந்தால் 250 ரூபாயும் இழப்பீடாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன் அடிப்படையில் இந்த தொகை வழங்கப்பட்டுள்ளது.

லக்னோவில் இருந்து டெல்லி சென்ற தேஜஸ் ரயிலில் முன்பதிவு செய்த 451 பயணிகளுக்கும், டெல்லியில் இருந்து லக்னோ சென்ற தேஜஸ் ரயிலுக்காக காத்திருந்த 500 பயணிகளுக்கும் ரயில் 2 மணிநேரம் தாமதமாக வந்ததால் தலா 250 ரூபாய் இந்த இழப்பீடு வழங்கப்பட்டது.

இதுகுறித்து ஐஆர்சிடிசி தலைமை மண்டல மேலாளர் அஷ்வினி ஸ்ரீவஸ்தவா கூறுகையில், ” அனைத்து பயணிகளின் செல்போனுக்கும் ஒருலிங்க் அனுப்பியுள்ளோம். அந்த லிங்கை கிளிக் செய்தால் இழப்பீடு கேட்டு விண்ணப்பம் வரும் அதில் பெயர், டிக்கெட் எண் குறிப்பிட்டால் இழப்பீடு வங்கிக்கணக்கில் சேர்க்கப்படும்” எனத்தெரிவித்தார்.

நாட்டிலேயே முதல்முறையாக தனியார் மூலம் லக்னோ-டெல்லி, டெல்லி-லக்னோ இடையே தேஜஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த திடீர் தாமதத்துக்கு ரயில் பெட்டிகள் பராமரிப்பு பணியில் ஏற்பட்ட தாமதமே காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தாமதத்தால் காத்திருந்த பயணிகள் அனைவருக்கும் தேநீர், மதிய உணவு, தங்குமிடம் ஆகியவை வழங்கப்பட்டு, தாமதத்துக்கு மன்னிக்கவும் என்ற சிறிய பரிசும் வழங்கப்பட்டது.