மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாள் – திருப்பாவை – பாடல் 1

திருப்பாவை – பாடல் 1
மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோ பன்குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளம்சிங்கம்
கார்மேனி செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்
நாரா யணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்.
விளக்கம்:
திருப்பாவையின் முதல் பாசுரம்.. இதில், பாவை நோன்பு , யாரை முன்னிட்டு, யார் யார் நோற்றுக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதைப் பகர்கிறார்    கோதை நாச்சியார்.
சீர்…செல்வம்..அனைததும் .  ம்  நிறைந்துள்ள திருவாய்ப்பாடியில், இறைபணி செய்யக்கூடிய செல்வத்தைக் கொண்டும்,கவின்மிகு ஆபரணங்களை அணிந்துமுள்ள நங்கைமீர்!!! மாதங்களில் மகத்துவம் கொண்ட இம் மார்கழியில் இன்று நன்னாளாக …அதுவும் பூரணசந்திரனாக ஒளிரும்   நல்ல நாளாக  நமக்கு வாய்த்த நாளிது. .
கூர் வேல் ஆயுதத்தின் துணை  கொண்டு, கண்ணனாகிய குழந்தைக்கு தீங்குசெய்ய  வரும் அரக்கர் மீது சீறி அவர்களை அழிக்கும் கொடுந் தொழில் பபுரியும்   நந்தனகோபன் குமாரனாகப்  பிறந்தவனும், அழகு சேர்  கண்களை உடைய யசோதைக்குச்   சிங்கக் குட்டி  போலத் திகழ்பவனும்,கார்  மேகக் கூட்டமன்ன  திரள்  மேனி அழகு கொண்டவனும்  ,  தாமரைப்  போன்ற நயனங்களையும் சூரிய சந்திரர்  போன்ற பிரகாஸமான  முகத்தையும் உடையவனான அவனே  நாராயணன். அவனே நமக்கு தொண்டு என்னும் பறையைக் கொடுக்கும் நிலையில் மட்டுமின்றி  அவனாலே நாம் பேறு பெற்றோம் என்ற சிறப்பையும்  கொடுக்கும்படியாக நிற்கின்றான்.  இந்த வையகத்தினர் கொண்டாடும்படி  இந்த நோன்பிலே ஊன்றி,திளைத்து  நீராட விரும்பும்    பெண்களே! . வாரீர்…. என்று ஆண்டாள் தன் தோழியரை எழுப்பி பாவை நோன்பு நோற்க அழைக்கிறாள்.
இதன் மூலம், ஸ்ரீமந்நாராயணனே கண்ணனாக அவதரித்தான், அவனே நாம் வேண்டும் பேற்றினை அளிக்க வல்லான் என்று கூறி உலகத்தார் மெச்ச உடன் வருமாறு நோன்பு நோற்க தோழியரை அழைக்கிறார் ஆண்டாள்.