மாணிக்கவாசகர் அருளிச் செய்த திருவெம்பாவை 1

ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும்
சோதியை யாம் பாடக் கேட்டேயும் வாள் தடங்கண்

மாதே ! வளருதியோ? வன்செவியோ நின்செவிதான்?
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலி போய்

வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து
போதார் அமளியின் மேல் நின்றும் புரண்டு இங்ஙன்

ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னே என்னே
ஈதே எந்தோழி பரிசேலோர் எம்பாவாய்

வாள் போன்ற நீண்ட கண்களை உடைய ஆரணங்கே! முதலும் முடிவும் இல்லாத சோதிஸ்வரூபமாய் – ஒளிவெள்ளமாய்த் திகழும் நம் சிவபெருமான் குறித்து நாங்கள் நெக்குருகி உள்ளம் கசிந்து பாடுவது உன் காதில்தான் விழவி ல்லையா? உன் காதுகள் செவிடாகி விட்டனவோ ?! அந்த மகாதேவனின் சிலம்பணிந்த பாதாரவிந்தங்களைச் சரணடைவது குறித்து நாங்கள் பாடியது கேட்டு, உனது வீட்டின் அருகேயுள்ள மற்றொரு இல்லப் பெண் துயில் விழித்து விம்மி விம்மி அழுதாள். அவனது நாமத்தின் மகிமையுணர்ந்து பின்னர் தரையில் விழுந்து புரண்டாள் பின் மூர்ச்சையானாள். ஆனால், நீ இன்னமும் உறங்குகிறாயே! பெண்ணே! நீயும் அண்ணாமலையாம் அருள்சோதியைப் பாட எழுந்து வருவாயாக!

விளக்கம்: திருவண்ணாமலையில் அண்ணாமலையார் மார்கழி அதிகாலை வேளையில் பவனி வருகிறார். அவரைத் தரிசிக்க இருமருங்கும் பெண்கள் பலரும் காத்து நிற்கிறார்கள். தங்களுக்குக் கிடைத்த அரிய பெரும்பேறு தங்கள் தோழிக்கும் கிடைக்க வேண்டுமென்ற ஆசையில் அவளது உறக்கம் கலைய அவளைத் தோழியர் எழுப்புகின்றனர்.

திருவெம்பாவைப் பாடல்களனைத்தும் மாணிக்கவாசகரால் திருவண்ணாமலையில் எழுதப்பட்டவை.