மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் திட்டம்; கிரையோஜெனிக் இன்ஜின் சோதனை வெற்றி – இஸ்ரோ

மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்துக்கான சிஇ20 கிரையோஜெனிக் இன்ஜின் சோதனையை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

ககன்யான் திட்டத்தின் மூலம்தரையில் இருந்து 400 கிமீ தொலைவுள்ள புவி தாழ் வட்டப் பாதைக்கு விண்கலம் மூலம் 3 வீரர்களை அனுப்பி, அவர்களை மீண்டும் பூமிக்கு பாதுகாப்பாக திருப்பி அழைத்துவர இஸ்ரோ முடிவு செய்துள்ளது. இத்திட்டத்தை 2025-ம் ஆண்டில் செயல்படுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. அதற்குமுன்னதாக பல்வேறு கட்ட பரிசோதனை முயற்சிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. அதன்படி, கிரையோஜெனிக் இன்ஜின் பரிசோதனையானது 7 கட்டங்களாக நடத்தப்பட்டு வந்தன.

அதன் இறுதிக்கட்ட பரிசோதனை திருநெல்வேலி மாவட்டம் மகேந்திரகிரியில் கடந்த 13-ம் தேதி வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக இஸ்ரோவின் அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதள பக்கத்தில், “மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும்போது கலனின்தாங்கு திறன், செயல் திறன்,நிலைத்தன்மை ஆகியவை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது” எனகூறப்பட்டுள்ளது. இத்துடன் சிஇ20 கிரையோஜெனிக் இன்ஜின் புகைப்படமும் பகிரப்பட்டுள்ளது.