நாதஸ்வர கலைஞரின் மகன் வழக்கறிஞர் சிவில் நீதிபதி தேர்வில் வெற்றி

திருப்போரூரை சேர்ந்த நாதஸ்வர கலைஞரின் மகன் வழக்கறிஞர் யுவராஜ், சிவில் நீதிபதி தேர்வில் வெற்றி பெற்றார். திருப்போரூர் அபிராமி நகர் பகுதியை சேர்ந்தவர்கள் தனசேகரன் – லோகநாயகி தம்பதியர். நாதஸ்வர கலைஞரான தனசேகரன் . இவரது மகன் யுவராஜ் (30). இவருக்கு திருமணமாகி நிஷாந்தினி என்ற மனைவியும், ஆழி (1) என்ற மகளும் உள்ளனர். கடந்த 2014ம் ஆண்டு சென்னை அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் பி.எல். (ஹானர்ஸ்) படித்து முடித்த யுவராஜ், பின்னர் அதே பல்கலைக்கழகத்தில் எம்.எல். சேர்ந்து 2017ம் ஆண்டு முடித்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் அண்மையில் நடைபெற்ற சிவில் நீதிபதி தேர்வில் கலந்துக்கொண்டு தேர்வெழுதினார். இந்த தேர்வில் யுவராஜ் வெற்றிபெற்று நீதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த, தகவல் வெளியானதும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே மலைவாழ் சமூகத்தைச் சேர்ந்தவர் நீதிபதி தேர்வில் வெற்றி பெற்றிருந்த தகவல் வெளியானது. தற்போது நாதஸ்வர கலைஞரின் மகன் வெற்றி பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. தொடர்ந்து அடித்தட்டு மக்களின் பிள்ளைகள் தொடர்ந்து வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளதற்கு தமிழ்நாட்டின் கல்வி குறித்த விழிப்புணர்வுதான் காரணம் என்று தெரிய வந்துள்ளது.