மகாராஷ்டிரா அரசியலில் திருப்பம் – காங், என்சிபி எம்எல்ஏக்கள் 4 பேர் திடீர் ராஜினாமா – பாஜகவில் சேர தயார்

மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில்  சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 4 எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜினா செய்தனர்.

இவர்கள் 4 பேரும் விரைவில் பாஜகவில் சேர்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான பேச்சில் ஈடுபட்டு வருகின்றனர். சதாரா தொகுதியின் என்சிபி எம்எல்ஏ ஷிவன்திரசிங்ராஜே போஷலே, அகோல் தொகுதி எம்எல்ஏ வைபவ் பிசாட், அய்ரோலி தொகுதி எம்எல்ஏ சந்தீப் நாயக், நய்கான் தொகுதி எம்எல்ஏ காளிதாஸ் கோலம்கர் ஆகியோர் தங்கள் ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ஹரிபா பாகடேயிடம் தனித்தனியாக இன்று சமர்பித்தனர்.

மகாராஷ்டிராவில் உள்ள 288 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 240 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சிக்கும், என்சிபிக்கும் இடையே உடன்பாடு எட்டப்பட்டுவிட்டதாக சரத்பவார் சில நாட்களுக்கு முன் அறிவித்த நிலையில், எம்எல்ஏக்கள் ராஜினாமா நடந்துள்ளது.

ராஜினாமா செய்த 4 எம்எல்ஏக்களும் விரைவில் பாஜகவில் இணைய உள்ளனர் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.