போதை பொருள் கடத்தலை கண்காணிக்க அரசு தவறி விட்டது: அண்ணாமலை

”போதை பொருள் கடத்துபவர்களை கண்காணிக்க, அரசு தவறி விட்டது, என, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் தெரிவித்தார்.

போதைப்பொருட்கள், இந்தியாவின் எல்லையில் இருந்து ஊடுருவுகின்றன. பெற்றோர்களும், ஆசிரியர்களும் கண்காணிக்க வேண்டும். போதைப்பொருள் கடத்திய ஜாபர் சாதிக், புதிய மனிதர் கிடையாது. ஏற்கனவே, 2013ல் கைது செய்யப்பட்டுள்ளார். இப்போது, சர்வதேச கிரிமினலாக மாறியுள்ளார். ஒருமுறை வழக்கு பதிவு செய்யப்பட்டு விட்டால், போலீசார் கண்காணிக்க வேண்டும். ஆனால் கண்காணிக்கவில்லை.

அவர், டி.ஜி.பி.,யிடம் விருது வாங்கியுள்ளார். சினிமா கம்பெனி நடத்துகிறார். தி.மு.க.,குடும்பத்திடம் நட்பாக உள்ளார். ஜாபர் சாதிக், எல்லா இடத்திலும் ஊடுருவியுள்ளார். முதல்வர், அமைச்சர்கள், உதயநிதி என எல்லோருடனும் புகைப்படம் எடுத்துள்ளார். யாருக்கு சந்தேகம் வராது. பள்ளி, கல்வித்துறை, முதல்வர்கள், ரோட்டரி, லயன்ஸ் கிளப் தலைவர்கள் போதை பொருளை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தென்காசியில் போதை பொருளை ஒழிக்க, ஒரு ‘ஸ்டார்ட் அப் சேலஞ்ச்’ நடத்துகிறோம். மார்ச் 7, 8 தேதிகளில், மத்திய அமைச்சர் அஷ்வினி தலைமையில் நடக்கிறது. ஸ்ரீதர் வேம்பு பங்கேற்கிறார். சமுதாய அக்கறையில், இந்த பிரச்னையை சரி செய்ய நினைக்கிறோம். உதயநிதியை, மோடியின் நகத்தில் உள்ள துாசுக்கு கூட, சமம் இல்லை என்று சொன்னதால், தி.மு.க.,வினருக்கு கோபம் வந்து விட்டது. அவர்கள் என்ன பேசினாலும், இங்கேதான் இருக்கப்போகிறோம். ஆட்சியிருக்கிறது, காவல் துறை இருக்கிறது என்பதற்காக, என்ன வேண்டு மென்றாலும் பேசலாம். காலம், காட்சிகள் மாறும்போது, அவர்களுக்கு என்ன நடக்கிறது என்பதை பார்த்துக் கொள்ளலாம். லோக்சபா தேர்தலை பொறுத்தவரை 39 தொகுதிகளிலும், பணி செய்து கொண்டிருக்கிறேன். எனது விருப்பு, வெறுப்பு எதுவும் இல்லை. பிரதமர் மோடி என்ன சொன்னாலும் கட்டுப்படுகிறேன்.