“சனாதனம் குறித்து துஷ்பிரயோக பேச்சு ” – உதயநிதிக்கு சுப்ரீம் கோர்ட் குட்டு

சனாதனம் குறித்து தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி பேசியதன் மூலம் அரசியலமைப்பு சட்டத்தை பயன்படுத்தி துஷ்பிரயோகமாக பேசியுள்ளார் என சுப்ரீம் கோர்ட் கண்டித்துள்ளது.

சில மாதங்களுக்கு முன்னர் அமைச்சர் உதயநிதி சனாதனம் குறித்து கொசுவை போல் ஒழிக்க வேண்டும் என கூறியிருந்தார். இவரது கருத்துக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஹிந்து அமைப்புகள், பா.ஜ.,வினர் கண்டித்து பல போராட்டங்களை நடத்தினர். இவரது பேச்சு குறித்து சுப்ரீம் கோர்ட்டில் பல ஹிந்து அமைப்புகள் , மஹாராஷ்டிரா, உ .பி., காஷ்மீர், பீஹார், கர்நாடகா என பல மாநிலங்களில் பல புகார்கள் அளிக்கப்பட்டு வழக்கும் பதியப்பட்டது. பல மாநிலங்களில் தொடரப்பட்ட வழக்குகளை ஒரே மனுவாக இணைத்து விசாரிக்குமாறு கோரும் மனு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த விசாரணையில் உதயநிதி சார்பில் பிரபல வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி ஆஜரானார். அவரிடம் நீதிபதிகள் சற்று கோபத்துடன் பேசினர். நீதிபதிகள் ஷங்கர்கண்ணா, தீபாங்கர் தத்தா ஆகியோர் அமைச்சர் உதயநிதியை கடுமையாக விமர்சித்துள்ளனர். நீதிபதிகள் கூறியதாவது:

” உதயநிதி ஒரு அமைச்சர் , அவர் ஒன்றும் சாமானிய மனிதர் அல்ல, பேசும் போது என்ன மாதிரியான தீங்குகளை உருவாக்கும் என அவர் எண்ணி பார்க்க வேண்டும். இது கூட உங்களுக்கு தெரியாதா ? கருத்து சுதந்திரம் என்ற பெயரில் அரசியல் அமைப்பு சட்டத்தை பயன்படுத்தி துஷ்பிரயோகமாக பேசியுள்ளார். இது ஏற்புடையது அல்ல. ” இவ்வாறு நீதிபதிகள் கூறினர். இந்த வழக்கு தொடர்பாக சம்பந்தப்பட்ட ஐகோர்ட்டுகளை அணுகுமாறு நீதிபதிகள் கூறினர். ஆனாலும் வக்கீல் சிங்வி, இது போன்று இணைக்கப்பட்ட வழக்குகளான அர்னாப் கோஸ்வாமி, அமீஸ்தேவகன், நுபுர்சர்மா போன்ற வழக்குகளை எடுத்து கூறினார். இதனை ஏற்ற நீதிபதிகள் மனு விசாரணையை அடுத்த வாரம் வெள்ளிக்கிழமைக்கு ஒத்தி வைத்தனர்.