புல்வாமா தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அமித் ஷா மரியாதை

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மரியாதை செலுத்துகிறேன் என தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் டிவிட்டர் பதிவில்,  “புல்வாமா தாக்குதலின் தியாகிகளுக்கு நான் மரியாதை செலுத்துகிறேன். நமது தாய்நாட்டின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டிற்காக மிகுந்த தியாகம் செய்த எங்கள் துணிச்சலான இதயங்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் இந்தியா என்றென்றும் நன்றியுடையதாக இருக்கும்” என்று அமித் ஷா தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு பிப்ரவரி  14 ஆம் தேதி பிற்பகல் 3 மணியளவில் ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் (சிபிஆர்எஃப்)  பயணித்த வாகனத்தின் மீது வெடிபொருள் நிரப்பிய காரை மோதச் செய்து, ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பைச் சேர்ந்த  பயங்கரவாதி தாக்குதல் நடத்தினார். இதில் 40 வீரர்கள் உயிரிழந்தனர்.

ஜம்முவிலிருந்து ஸ்ரீநகர் வரை சுமார் 2500 சிஆர்பிஎஃப் வீரர்கள் பயணித்த 78 பேருந்துகளின் தாக்குதலுக்குப் பின்னர் இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் ஏற்பட்டது.

பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக நாடு தழுவிய எதிர்ப்புக்கள் எழுந்தது. இரு நாடுகளும் உச்சபட்ச கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும்; பதற்றத்தை தணிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஐ.நா. பொதுச் செயலர் அன்டோனியோ குட்டெரஸ் வலியுறுத்தியிருந்தார்.