புத்திசாலி மான்

பிரசவ வலியில் துடித்த மான் ஒன்று தன் குட்டிகளைப் பிரசவிப்பதற்கு காலியாக இருந்த ஒரு குகைக்கு சென்று குட்டிகளை பிரசவித்தது. அந்த மான் தனது குட்டிகளுடன் அந்த குகையிலேயே வசித்து வந்தது. வெகு நாட்களாக வெளியே சென்றிருந்த சிங்கம் அந்த குகைக்கு திரும்பி வந்தது. குட்டிகளை அழைத்துக் கொண்டு ஓட முடியாது என்பதை உணர்ந்த மான், தன் குட்டிகளிடம் “சிங்கம் குகைக்கு அருகில் வந்ததும், எல்லோரும் சத்தமாக எனக்கு சிங்கம் கறிவேண்டும் என்று கத்துங்கள்” என்று சொன்னது. சிங்கம் வந்த உடன் குட்டிகளும் கத்தியது. குகையின் எதிரொலியால் பயங்கரமாக இருந்த சத்தத்தை கேட்ட சிங்கம் நம்மைவிட பலசாலியான மிருகங்கள் உள்ளே இருப்பதாக நினைத்து ஓட்டமெடுத்தது.
ஒரு நரி, ஓடி வருகிற சிங்கத்தை பார்த்து, “ஏன் ஓடுகிறீர்கள்?” என்று கேட்க, “என்னுடைய குகையில் வேறு மிருகங்கள் குடியிருக்கின்றன. அவை என்னைக் கொல்ல காத்திருக்கின்றன” என்று சிங்கம் சொன்னது. அதை கேட்ட நரி, “அங்கு,. மானும் அதன் குட்டிகளும்தான் இருக்கிறது. வாருங்கள், பெரிய மான் உங்களுக்கு, குட்டிகள் எனக்கு” என்றது. அதற்கு சிங்கம், “சரி வருகிறேன். ஆனால் நீ ஏற்கனவே என்னை ஏமாற்றியவன், அதனால் நம் இருவர் வாலையும் முடிந்து கொண்டு செல்வோம்” என்று சொல்லி இரண்டின் வால்களையும் பிணைத்துக் கொண்டது.
சிங்கத்தை நரி அழைத்து வருவதைப் பார்த்த மான், தன் குட்டிகளிடம் சத்தமாக, “கவலைப்படாதீர்கள் பிள்ளைகளே, இன்று நாம் எப்படியும் சிங்கக்கறி சாப்பிடுவோம், அதை எப்படியும் அழைத்து வருவதாக நரி அண்ணன் சொல்லிச் சென்றுள்ளது. நிச்சயம் சிங்கக்கறி கிடைக்கும்” என்றது. இதைக் கேட்ட சிங்கம் தலைதெறிக்க ஓடியது. வாலைப் பிணைத்திருந்த நரியும் அடிபட்டு இறந்தது.

கிருஷ்ணா சதீஷ், கலிபோர்னியா,
அமெரிக்கா