பிரவாஷி பாரதிய திவஸ்

அமெரிக்கா, நியூஸிலாந்து உள்ளிட்ட பல நாடுகளில் பாரத வம்சாவழியினர் அரசு, தனியார் நிறுவனங்களில் பெரிய பொறுப்புகளில் இருந்து சிறப்பாக செயல்படுகின்றனர். பாரதத்தினர் திறமை, அர்ப்பணிப்பு உணர்வு போன்றவை உலக நாடுகளில் பெரிதும் மதிக்கப்படுகின்றன. இப்படி, வெளிநாடுகளில் வாழும் புலம் பெயர்ந்த பாரத நாட்டினர், பாரத வம்சாவளியினர், பாரதத்துடனான அவர்களது தொடர்பு, அவர்கள் தாயகத்திற்கு ஆற்றும் அரும் பணிகள் போன்றவற்றை நினைவு கூறும் வகையில், இன்று வெளிநாடுகளில் வாழும் பாரதீயர்கள் தினம் (பிரவாஸி பாரதிய திவஸ்) கொண்டாடப்படுகிறது.
வெளிநாட்டில் 20 ஆண்டுகள் வசித்து வந்த மகாத்மா காந்தி 1915, ஜனவரி 9ல், நாடு திரும்பினார். இதை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் வெவ்வேறு கருப்பொருளோடு கொண்டாடப்படும் இந்த நாளின் இந்த வருட கருப்பொருள் ‘ஆத்ம நிர்பர் பாரதத்திற்கான பங்களிப்பு’.
2003 முதல் பிரவாசி பாரதிய திவஸ் கொண்டாடப்படுகிறது. மத்திய வெளிநாடு வாழ் இந்தியர் நல அமைச்சகத்தின் சார்பில் இந்த வெளிநாடுவாழ் பாரதீயர்கள் தினவிழா கொண்டாடப்படுகிறது. தேச வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்த வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு ‘பிரவாசி பாரதிய சம்மான்’ விருது வழங்கப்படுகிறது.
என்னதான் 2003ல் இது துவங்கப்பட்டது என்றாலும் கடந்த சில வருடங்களாக வெளிநாடு வாழ் பாரத தேசத்தவர்கள் பாரதத்தில் தொழில் துவங்க, முதலீடு செய்ய, தேச வளர்ச்சியில் ஆக்க பூர்வ பங்கு பெற என அரசு அவர்களுக்கு பல்வேறு சலுகைகள் அளித்து வருகிறது. அது மட்டுமில்லாமல், வெளிநாடுகளில் வாழும் பாரத தேசத்தவர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் ஓடோடி சென்று உதவுகிறது இன்றைய பாரத அரசு. சிரியா உள்நாட்டு போர், கொரோனா பேரிடர் போன்ற காலங்களில் பாரத அரசு மிக சிறப்பாக செயல்பட்டு அவர்களுக்கு உதவியதை உலக நாடுகளேகூட பாராட்டியுள்ளன.